மனைவியைக் கொன்று காதலிக்கு காதலர் தின பரிசு அளித்தவரை 15 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் கைது செய்துள்ளனர். 

மனைவியைக் கொன்று காதலிக்கு காதலர் தின பரிசு அளித்தவரை 15 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் கைது செய்துள்ளனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கேரள மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்டவர் தருண். இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வந்தார். வங்கி அதிகாரியாக பணியாற்றும் சஜ்னி என்ற பெண்ணை கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்தது. தருண் தனது காதலிக்கு, பரிசு பொருள் அளித்ததாக கூறி சஜ்னி சண்டை போட்டுள்ளார். 

2003 ஆம் ஆண்டு பிப்ரபரி 14 ஆம் தேதி அன்று சஜ்னி உயிரிழந்த நிலையில் வீட்டில் கிடந்துள்ளார். அவரது இறப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து மனைவி சஜ்னியை கொன்று விட்டு சென்றதாக கூறியுள்ளார். தருணின் பேச்சில் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதனைத் தெரிந்து கொண்ட தருண் தலைமறைவாகியுள்ளார்.

இதன் பிறகு, தனது அடையாளத்தை மாற்றிக் கொண்ட தருண், டெல்லி மற்றும் புனேவில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். புனேவில் பணியாற்றியபோது, நிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த 15 வருடங்களாக அவர் மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில்தான், தருணிண் தாயார் அன்னம்மாவிடம் அகமதாபாத் க்ரைம் பிரான்ச் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கேரளாவுக்கும் பெங்களூருவுக்கும் அடிக்கடி பயணமானதையும் கண்டுபிடித்துள்ளனர். மேலும், அன்னம்மாவின் செல்போனுக்கு பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் இருந்தும், நிஷா என்ற பெண்ணின் செல்போனில் இருந்தும் அழைப்புகள் வந்துள்ளதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து, பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்திற்கு சென்ற போலீசார், தருண் குறித்து விசாரித்துள்ளனர். அப்போது, அந்த பெயரில் யாரும் இல்லை என்று கூறியதும், அவரது புகைப்படத்தைக் காட்டியுள்ளனர். அப்போது, தருண் தனது பெயரை மாற்றிக் கொண்டு பிரவீன் என்ற பெயரில் உலா வந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், தருண் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து தருண் கைது செய்யப்பட்டார். தருணின் வாழ்க்கை பற்றி, நிஷாவுக்கு முழுவதும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.