ஆம்புலன்ஸ் வசதிக்கு பணம் இல்லாததால் தொழுநோயால் பாதிக்கப்பட்டு இறந்த மனைவியின் சடலத்தை, அவரது கணவர் 60 கிமீ தள்ளுவண்டியில் சுமந்து சென்றார்.

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமுலு. இவரது மனைவி கவிதா. இருவரும் தொழுநோயாளிகள். விருமானத்துக்காக ஸ்ரீராமுலு, ஐதராபாத் நகரத்தில் மனைவியை தள்ளுவண்டியில் உட்கார வைத்து பிச்சை எடுத்து வந்தார்.

கடந்த சில நாட்களாக கவிதாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு சிகிச்சை அளிக்க பண வசதி இல்லை. இதனால், கை வைத்தியம் பார்த்து, ஸ்ரீராமுலு பராமரித்து வந்தார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி கவிதாவுக்கு உடல்நிலை பாதிப்பு அதிகமானது. இதனால், அவர் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து, மனைவியின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக ஸ்ரீராமுலு, ஆம்புலன்சை அழைத்துள்ளார். அதற்கு ரூ.5 ஆயிரம் கேட்டுள்ளனர். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லாததால், மனம் நொத்துபோன அவர், மனைவியை உட்கார வைத்து பிச்சை எடுத்த தள்ளுவண்டியிலேயே, சொந்த ஊருக்கு கொண்டு சென்றார்.

சுமார் 60 கி.மீ. தூரம் வரை சென்ற அவருக்கு, வழியில் சில சமூக ஆர்வலர்கள் பணம் கொடுத்தும், அவரது மனைவியின் சடலத்தை ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி வைத்தும் சொந்த கிராமத்துக் அனுப்பி வைத்தனர். கவிதா தொழுநோயாளி என்பதால் அவரது இறுதி சடங்கில் உறவினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்த தீண்டாமை செயல்பாடுகள் தற்போது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே தீப்பிழம்பாய் கொதிக்கிறது.