இந்தியாவில் முதல் முறை... Month End பிரச்சினைக்கு தீர்வு - இந்தியா மார்ட் அதிரடி!
இந்தியாமார்ட் நிறுவனம் தனது ஊழியர்களின் நிதி நெருக்கடியை தீர்க்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது.
உலகம் முழுக்க ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் நிறுவனத்திற்காக கடுமையாக உழைத்து அடுத்த மாதம் அதற்கான ஊதியத்தை சம்பளமாக வாங்கி கொள்வோருக்கு மட்டும் தான் monrth end எனப்படும் மாச கடைசியின் கஷ்டத்தை மிக சரியாக புரிந்து கொள்ள முடியும். சிலர் அளவுக்கு மீறி செலவு செய்து விட்டு மாதத்தின் முதல் வாரத்திலேயே 'மாச கடைசி காசே இல்லை' என கூறுவர்.
பலர் வாங்கிய சம்பளம் தீர்ந்து போனதும் கிரெடிட் கார்டு கொண்டு வாழ்க்கையை நடத்துவர். பின் அடுத்த மாதம் கிரெடிட் கார்டு பில் கட்டிவிட்டு மீண்டும் கிரெடிட் கார்டு தேய்த்து, வட்டி செலுத்திக் கொண்டே மாத செலவுகளை நடத்துவர். இவ்வாறு ஊழியர்கள் யாரும் கஷ்டப்படக் கூடாது என நினைக்கும் நிறுவனம் இந்தியாவில் இயங்கி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரும் முன்னணி சந்தைப்படுத்தும் நிறுவனமான இந்தியாமார்ட், தனது ஊழியர்களின் நிதி நெருக்கடியை தீர்க்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது.
வார சம்பள முறை:
இந்தியாவில் முதல் முறையாக இந்தியாமார்ட் தனது ஊழியர்களுக்கு மாதம் நான்கு முறை சம்பளம் கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்களின் மாத சம்பளம் நான்காக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வாரம் வழங்க முடிவு செய்து இருக்கிறது. இவ்வாறு செய்யும் போது ஊழியர்கள் தங்களின் வரவு செலவை சிறப்பாக திட்டமிட வழி செய்யும்.
ஏற்கனவே இந்த நடைமுறை அமெரிக்கா, நியூசிலாந்து, ஹாங்காங் போன்ற பல முன்னணி நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. எனினும், இந்தியாவில் இதுபோன்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
இந்தியாமார்ட்:
இந்தியாவின் மிகப் பெரும் ஆன்லைன் மார்கெட்பிளேஸ் ஆன இந்தியாமார்ட் விற்பனையாளர்களை நேரடியாக வினியோகஸ்தர்களுடன் இணைக்கும் பணியை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் எஸ்.எம்.இ., பெரிய நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிலதிபர்களுக்கு பிளாட்பார்ம் அமைத்துக் கொடுத்து வருகிறது. 1996 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தியாமார்ட்: “To Make Doing Business Easy” (வியாபாரத்தை எளிமையாக்க செய்வது) எனும் குறிக்கோள் கொண்டிருக்கிறது.
தற்போது இந்தியாமார்ட் பிளாட்ஃபார்மில் 2.6 கோடி விற்பனையாளர்கள் உள்ளனர். இந்த தளத்தில் 3.6 கோடி பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தியாமார்ட் நிறுவனத்தில் 3600 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தியா முழுக்க இந்தியாமார்ட் நிறுவனத்திற்கு 60-க்கும் அதிக அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
சிக்கல்:
இந்தியாமார்ட் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய வார சம்பள முறை சிலருக்கு பயனுள்ளதாகவே இருக்கும். எனினும், மாத தவணை, கிரெடிட் கார்டு, வீட்டு வாடகை செலுத்தும் நிதி சுமைகளை கொண்டிருக்கும் ஊழியர்களுக்கு பிரச்சினையாகவே இருக்கும்.