கோவாக்சின் தடுப்பூசிக்கு ஓப்புதல் வழங்குவதில் நீடிக்கும் இழுபறி… கூடுதல் விளக்கம் கேட்கும் WHO!!
கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனத்திடம் உலக சுகாதார நிறுவனம் கூடுதல் விளக்கங்களைக் கேட்டுள்ளதால், தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தங்களுக்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். அந்த வகையில் இந்தியாவில் கோவிட்ஷீல்ட் மற்றும் கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டன. அதில் கோவாக்சின் என்ற தடுப்பூசி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் என்ற நிறுவனம், இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் தடுப்பூசி திட்டத்தின்கீழ் பயன்பாட்டில் உள்ள கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பின் அவசர கால பயன்பாட்டு அங்கீகார பட்டியலில் சேர்க்கக்கோரி பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.
உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளிக்கும் என மக்களும் மத்திய அரசும் நம்பிக்கை வைத்திருந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் தடுப்பூசி குறித்து கூடுதல் விவரங்களையும் விளக்கங்களயும் கேட்டுள்ளது. இதனால் ஒப்புதல் வழங்குவதில் இழுபறி நீடிக்கிறது. உலக சுகாதார நிறுவனம் கோவாக்சினுக்கு ஒப்புதல் அளித்தால் அந்த தடுப்பூசியை மற்ற நாடுகள் அங்கீகரிக்க அனுமதிக்கப்படுவதோடு தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்திய பயணிகள் வெளிநாடு செல்லவும் அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடதக்கது.