டெங்கு பாதிப்பு நிலவரத்தை பேஸ்புக்கில் போட்ட அரசு மருத்துவமனை டாக்டர் சஸ்பெண்ட்...
டெங்கு பாதிப்பு நிலவரங்களை உள்ளது உள்ளபடி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அரசு மருத்துவமனை தலைமை டாக்டரை சஸ்பெண்ட் செய்துள்ளது மாநில அரசு.
இது நடந்தது கோல்கத்தாவில். மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் பரசாத் மாவட்ட மருத்துவமனையில் பணியில் இருப்பவர் டாக்டர் அருணாசல் தத்தா சௌத்ரி எம்.டி., இவருக்கு வெள்ளிக்கிழமை அன்று சஸ்பெண்ட் செய்த உத்தரவு வழங்கப்பட்டது. அதில், பொதுமக்களிடம் பயத்தைத் தோற்றுவிக்கும் தகவல்களை வெளிப்படுத்தி, மருத்துவமனை நிர்வாகத்துக்கு கெட்டபெயரை ஏற்படுத்தியதற்காக சஸ்பெண்ட் செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இவர் தனது பேஸ்புக் பதிவில், அக்டோபர் மாதம் 6ம் தேதி, 500 பேர்களுக்கும் மேல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள் எனவும், அவர்களை சோதனை செய்து பார்ப்பதில் பெரும் சிரமத்தைச் சந்தித்ததாகவும், பெரும்பாலானவர்கள் இடவசதியின்மையால் தரையில் படுத்திருந்தார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மாநில சுகாதாரத் துறையோ, கடந்த ஜனவரியில் இருந்து இதுவரையிலான காலத்தில், பல்வேறு மருத்துவமனைகளில் பதிவு செய்யப்பட்ட 18 ஆயிரம் பேரில், 19 பேர் மாநில அரசின் சார்பில் இயங்கப்படும் மருத்துவமனைகளில் உயிரிழந்தனர் என்று தெரிவித்தது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியோ டெங்கு பாதிப்புகளை மறைக்கப் பார்க்கிறது என்று எதிர்க்கட்சிகள் குறை கூறி வருகின்றன. டெங்கு பலி எண்ணிக்கையை, மாநில அரசு குறைத்துக் கூறுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.