வளர்ச்சி இந்தியாவை நோக்கி செல்வோம் வானொலி உரையில் பிரதமர் மோடி உறுதி
மத்திய அரசின் புதிய இந்தியா இயக்கத்தில் மக்கள் இணைந்து, நேர்மறையான இந்தியா என்ற நிலையில் இருந்து வளர்ச்சி இந்தியா நிலையை நோக்கிய பயணத்தில் இணைய வேண்டும் என்று பிரதமர் மோடி ‘மான் கி பாத்’ உரையில் கேட்டுக்கொண்டார்.
ஆண்டின் கடைசி உரை
2017ம் ஆண்டின் மனதோடு பேசுகிறேன் (மான் கி பாத்) வானொலி நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பாகியது. மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் இந்த வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசினார்.
பைபிள் மேற்கோள்
பிரதமர் மோடி பேசத் தொடங்கும்போது, நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறி தொடங்கினார். புனித பைபிளில் இருந்து வாசகத்தை மேற்கோள்காட்டி பேசினார். அவர் கூறியதாவது-
வளர்ச்சி இந்தியா
நாட்டில் ஏராளமான மக்கள் தங்களின் முயற்சியால், பலரின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வருகிறார்கள். இது ‘புதிய இந்தியா’ நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கட்டமைக்க வேண்டும். வாருங்கள், சின்ன மகிழ்ச்சியுடன் இந்தபுத்தாண்டை வரவேற்போம். நேர்மறையான இந்தியா என்றதில் இருந்து வளர்ச்சி இந்தியா என்ற பயணத்தை தொடங்குவோம்.
மக்கள் தங்களின் வாழ்க்கையில் நடந்த நேர்மறையான கதைகளை மைகவ்போர்டல்(mygovportal) என்ற தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.
வாழ்த்துக்கள்
ஜனவரி 1-ந்தேதி மிகவும் சிறப்பான நாளாகும். 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த ஜனநாயக நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளையும் வரவேற்கிறேன். அவர்கள் தகுதியுள்ள வாக்காளர்களாக மாற வேண்டும். ஜனநாயகத்தில் வாக்குரிமை என்பது மிகப்பெரிய சக்தி. இது நாட்டை மாற்றும் சக்தி கொண்டது.
மாதிரி நாடாளுமன்றம்
ஒவ்வொரு மாவட்டங்களிலும் இளைஞர்கள் மூலம் மாதிரி நாடாளுமன்றம் கூட்டம் நடத்தி, வளர்ச்சி விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். புதிய இந்தியா இளைஞர்கள், புதிய சிந்தனைகளுடன் வந்தால்தான் 2022ம்ஆண்டு இலக்குகளை அடைய முடியும்.
ஜம்மு-காஷ்மீர் அரசு பணித் தேர்வில் முதலிடம் பிடித்த அஞ்சும் பஷீர் கான் கட்டாகுக்கு என வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆசியான் நாடுகள் தலைவர்கள் பங்கேற்பு
பிரதமர் மோடி பேசுகையில், “ 2018ம் ஆண்டு குடியரசு தினம் நமக்கு மறக்க முடியாத நாளாக இருக்கும். ஆசியான் அமைப்பில் உள்ள 10 நாடுகளின் தலைவர்கள் குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக வர இருக்கிறார்கள். இது அனைத்து இந்தியர்களுக்கும் மிகப் பெருமை தரக்கூடிய செய்தியாகும். இந்திய வரலாற்றிலேயே எப்போதும் நிகழ்ந்திராத ஒரு சம்பவமாகும்’’ எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் வருகின்றனர்.