ராஜஸ்தானில் முஸ்லிம் கொலை; கொலையாளிக்கு பாராட்டு கூறிய ‘வாட்ஸ் அப் குழுவில்’ பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.
ராஜஸ்தானில் ‘லவ் ஜிகாத்’தை காரணம் காட்டி, முஸ்லிம் ஒருவரை வெட்டி கொலை செய்து, எரித்த கொலையாளிக்கு வாட்ஸ் அப் குரூப் ஒன்று பாராட்டு தெரிவித்துள்ளது. அந்த குரூப்பில் பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வாட்ஸ் அப் குரூப்பில் பா.ஜனதா கட்சியின் எம்.பி. ராஜசமந்த் ஹரிம் சங் ரத்தோர், எம்.எல்.ஏ. கிரண் மகேஸ்வர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
எரித்து கொலை
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த முஸ்லிம் கூலித்தொழிலாளி முகம்மது அப்ரசுல். இவர் ராஜஸ்தானில் வேலை செய்து வருகிறார். இவர் ‘லவ் ஜிகாத்தை’ ஊக்கப்படுத்தினார் என்பதற்காக ராஜஸ்தானைச் சேர்ந்த சம்புலால் ரேகர்(வயது36) என்பவர் சமீபத்தில் வெட்டிக் கொலைசெய்து, பெட்ரோல் ஊற்றி எரித்தார். இதை செல்போன் மூலம் பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பரப்பினார். இது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கொலையாளி சம்புலால் ரேகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாராட்டு
இந்நிலையில், ராஜஸ்தானில், ராஜஸ்மந்த் நகரில் பிரேம் மாலி என்பவர் உருவாக்கிய ‘ஸ்வச் ராஜஸமந்த், ஸ்வச் பாரத்’ என்ற பெயரிலான குரூப்பில் கொலையாளி சம்புலால் ரேகருக்கு பாராட்டி செய்திகள் பரப்பிவிடப்படுகின்றன.
அந்த குரூப்பில் பா.ஜனதா கட்சியின் எம்.பி. ராஜசமந்த் ஹரிம் சங் ரத்தோர், எம்.எல்.ஏ. கிரண் மகேஸ்வர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
செய்தி இதுதான்....
அதில், “லவ் ஜிகாதிககளே எச்சரிக்கையாக இருங்கள்; சும்புலால் விழித்துக்கொண்டார், ஜெய் ஸ்ரீராம்’’ என பதிவிடப்பட்டுள்ளது. மேலும், சுக்தேவ் எனும் வழக்கறிஞர் சம்புலாலுக்கு ஆதரவாக வாதாடுவார். அவர் இதை இலவசமாகச் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வழக்கறிஞர் மறுப்பு
இந்நிலையில், உதய்பூர் மாவட்டம், மாவ்லி நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுக்தேவ் சிங் உஜ்வாலை தொடர்பு கொண்டு கொலையாளி ரேகருக்கு ஆதரவாக வாதிடுவது குறித்து நிருபர்கள் கேட்டனர்.
அப்போது, அவர் கூறுகையில், “ சமூக ஊடகங்களில் இப்படி ஒரு செய்தி பரவிவருவது எனக்கு தெரியாது. ரேகருக்கு ஆதரவாக வாதாடும் எண்ணம் இல்லை. ஏற்கனவே ஏராளமான வேலைகள் எனக்கு இருக்கின்றன அப்படி இருக்கும் போது, சமூக ஊடகங்களில் எப்படி வந்தது எனக்கு தெரியாது. ஒருவேளை சில வாடிக்கையாளர்கள் செய்து இருக்கலாம்’’ என்றார்.
பயன்படுத்துவதில்லை
பா.ஜனதா எம்.பி. ரத்தோர் அந்த வாட்ஸ் அப் குருப்பில் இருப்பது குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர் பதில் அளிக்கையில், “ ரகேருக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் இப்படி ஒரு செய்தி பரவியது எனக்கு தெரியாது. அந்த வாட்ஸ் குரூப்பில் இருந்தபோதிலும் அதில் என் பங்களிப்பு இருக்காது. வாட்ஸ் அப் தளத்தை பயன்படுத்தி நீண்டநாள் ஆகிவிட்டது’’ என்றார்.
கருத்து தெரிவிக்கவில்லை
ராஜஸ்தான் எம்.எல்.ஏ.வும், உயர் கல்வி அமைச்சருமான மகேஸ்வர் கூறுகையில், “ ஆயிரக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பில் இணைந்துள்ளனர், இதில் நான் எப்படி கவனம் செலுத்த முடியும். நான் எந்த கருத்தும் கூறவில்லையே’’ என்று தெரிவித்தார்.