முஸ்லிம் மதத்துக்கு மாறக்கோரி கேரள எழுத்தாளருக்கு 6 மாதம் கெடு விதித்து மிரட்டல் கடிதம்….
கேரள எழுத்தாளர் கே.பி.ராமனுன்னி 6 மாதங்களுக்குள் முஸ்லிம் மதத்துக்கு மாறவிட்டால், அவரின் கை, கால்கள் துண்டிக்கப்படும்
என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பெயர், முகவரி குறிப்பிடாமல் அனுப்பப்பட்ட கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
கேரள எழுத்தாளர் கே.பி. ராமனுன்னி. இவருக்கு கடந்த 6 நாட்களுக்கு முன் மிரட்டல் கடிதம் வந்தது. அதில் 6 மாதத்துக்குள் முஸ்லிம் மதத்துக்கு மாறாவிட்டால் கை,கால் துண்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எழுத்தாளர் ராமனுன்னி(வயது60) கூறுகையில், "முதலில் இது ஏதோ வெற்று மிரட்டல் என்று நினைத்து அஜாக்கிரதையாகவே இருந்தேன்.
ஆனால், சக எழுத்தாளர்கள் அறிவுறுத்தியதின் பேரிலேயே தற்போது கோழிக்கோடு காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளேன்.
மத்யமம் மலையாள நாளிதழில் இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி அண்மையில் நான் கட்டுரை எழுதினேன்.
அதில் வெறுப்படைந்த, எரிச்சல் அடைந்த ஒருவர் இக்கடிதத்தை தனக்கு எழுதியிருக்கலாம்’’ என்றார்.
இந்த கடிதத்தில், “ ராமனுன்னி தனது கட்டுரைகள் மூலம் அப்பாவி முஸ்லிம்களை திசை திருப்ப முயற்சிக்கிறார் என்றும், ராமனுன்னி ஒரு மத அடிப்படைவாதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல தெய்வ வழிப்பாட்டை பின்பற்றும் இந்து மதத்தையும் ஒரே தெய்வ வழிபாடு கொண்ட முஸ்லிம் மதத்தையும் ராமனுன்னி எப்படி ஒப்பிட்டு பேச முடியும். உங்களை நான் கொல்லப்போவதில்லை.
ஆனால், தொடுபுழாவைச் சேர்ந்த ஆசிரியர் டி.ஜே.ஜோசபின் கரம் துண்டிக்கப்பட்டதை நினைவுபடுத்துகிறேன்.
ஆறு மாதங்களுக்குள் முஸ்லிம் மதத்துக்கு மாறாவிட்டால் வலது கையும் இடது காலும் துண்டிக்கப்படும்’’ என அதில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.