Assembly Election Results 2022 : இன்று வாக்கு எண்ணிக்கை... ஐந்து மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்?
உ.பி, உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் தொடங்க உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உ.பி, உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் தொடங்க உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உ.பி, உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது. 7 கட்டங்களாக நடைபெற்ற இந்த வாக்குப் பதிவு கடந்த 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில் ஐந்து மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்க உள்ளது. இதில், 2 முதல் 3 மணி நேரத்துக்குள் எந்தெந்த மாநிலத்தில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது தெரிந்து விடும் என்று கூறப்படுகிறது. மேலும் அடுத்த 3 முதல் 4 மணி நேரத்திற்குள் முன்னணி நிலவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி உ.பி.யில் இறுதிகட்ட தேர்தல் நிறைவடைந்ததை அடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின.
அதில் உ.பி.யில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மணிப்பூரில் பாஜக ஆட்சியை தக்க வைக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. உத்தரகாண்ட் மற்றும் கோவாவில் தொங்கு சட்டபேரவை ஏற்படும் என கருத்துக்கணிப்பில் கணிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், கோவா மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் இழுபறியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தேர்தல் முடிவுக்கு பிந்தைய கூட்டணியுடன் ஆட்சியை கைப்பற்றுவதில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் அதற்காக பனாஜியில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ள பாம்போலிம் கிராமத்தில் ஒரு சொகுசு விடுதியில் தனது அனைத்து வேட்பாளர்களையும் தங்க வைத்துள்ளது. உத்தரகாண்டிலும் வேட்பாளர்கள் அனைவரும் ஒரே இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதே போல பாஜகவும் மாநில கட்சிகளுடன் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
எனவே, தேர்தல் முடிவுகள் வெளியானதும் உத்தரகாண்ட், கோவாவில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மணிப்பூரில் பாஜக தனது ஆட்சியை தக்க வைக்கும் என கணிப்புகள் கூறப்பட்டுள்ளதால், பாஜக வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. மணிப்பூரில் பாஜ மீண்டும் வெற்றி பெற்றாலும், தற்போதைய முதல்வர் பிரேன் சிங்குக்கு எதிரான உட்கட்சி பூசல் பெரிய அளவில் வெடிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தால், காங்கிரசுக்கு அது பெரும் பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது. இதனிடையே வாக்கு இன்று ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுவதால் ஐந்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.