இந்திய விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம்..! பாக்., சீனாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர்….!
இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுத்ரியை நியமித்து மத்திய பாதுகாப்புத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக விவேக் ராம் சவுத்ரியை நியமித்து மத்திய பாதுகாப்புத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் தளபதியாக இருந்துவரும் ஆர்.கே.எஸ்.பதாரியா வரும் 30-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் புதிய தளபதியை தேர்வுசெய்யும் பணிகளை பாதுகாப்புத் துறை அமைச்சகம் மேற்கொண்டது. இந்தநிலையில் விமானப்படையின் தற்போதைய துணைத் தளபதியாக இருக்கும் விவேக் ராம் சவுத்ரி புதிய தளபதியாக நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1982-ல் இந்திய விமானப்படையில் பணியில் சேர்ந்த விவேக் ராம் சவுத்ரி, பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். பல்வேறு ரக போர் விமானங்களை சுமார் மூவாயிரத்து 800 மணி நேரம் இயக்கிய அனுபவம் இவருக்கு உண்டு. விமானப்படை அகாடமியின் துணை தளபதி, விமானப் பாதுகாப்பு துறையில் உதவி தலைவர் உள்ளிட்ட பதவிகளை அலங்கரித்தவர் விவேக் ராம் சவுத்ரி. கடந்த ஜூலை மாதம் விமானப்படையின் துணை தளபதியாக பொறுப்பேற்ற விவேக்ராம் சவுத்ரி, பாகிஸ்தான், சீனா எல்லைகளில் பாதுகாப்பு பணிகளை கவனித்துவந்தார்.
லடாக்கில் சீனாவின் அத்துமீறலை தடுக்க இரவு, பகலாக அங்கு போர் விமானங்களை பறக்கவிட்டு சீன ராணுவத்தின் கண்களில் விரல்களை விட்டு ஆட்டியவர் என்ற பெருமையும் விவேக்ராம் சவுத்ரிக்கு உண்டு. சீனாவின் செல்லப்பிள்ளையாக இந்தியாவிற்கு குடைச்சல் கொடுக்கும் பாகிஸ்தானின் சதிகளையும் முறியடித்தவர் விவேக்ராம் சவுத்ரி. இந்திய விமானப்படை தளபதியாக விவேக்ராம் சவுத்ரி பதவியேற்பதன் மூலம் எல்லை கண்காணிப்பு பலமடையும் என்று பாதுகாப்பு துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.