மகளிர் தினத்தை முன்னிட்டு நாளை முதல் இலவச நாப்கின்கள் வழங்கும் ஏர்லைன்ஸ்...
மகளிர் தினத்தை முன்னிட்டு, தங்கள் நிறுவன விமானங்களில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு நாளை முதல் இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என்று விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவே முதல் முயற்சியாகும்.
மகளிர் தினத்தை முன்னிட்டு, தங்கள் நிறுவன விமானங்களில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு நாளை முதல் இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என்று விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவே முதல் முயற்சியாகும்.
உலகம் முழுவதும் நாளை (மார்ச் 8ம் தேதி) மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, பன்னாட்டு நிறுவனங்களும் சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், ஹரியானாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிர்வாகம், மகளிர் தினத்திலிருந்து தனது விமானங்களில் இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து விஸ்தாரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதில் பிளாஸ்டிக் இல்லை, நச்சு வாயுக்கள் இல்லை. விமானத்தில் பயணம் செய்யும் பெண்கள் தங்கள் பயணத்தை இலகுவாக மேற்கொள்ள இந்த நடைமுறை வரும் மார்ச் 8ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்” குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய விஸ்தாரா நிறுவனத்தின் மூத்த அதிகாரி தீபா சத்தா, “சிறிய செயல்கள், பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதற்கேற்ப, வாடிக்கையாளருக்கு நாப்கின் வழங்குவது அர்த்தமுள்ள தொடக்கமாக இருக்கும். பெண்களின் தேவைகளில் மிக முக்கியமான ஒன்றைக் கொடுக்கும் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருப்பதில், குறிப்பாக ஒரு பெண்ணாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இது, பல பயணிகளுக்கு உதவும்” என்றார்.
விஸ்தாரா ஏர்லைன்ஸின் இந்த விஸ்தார அறிவிப்பை சமூக வலைதளங்களில் பிரபலங்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றுக்கொண்டிருக்கின்றனர்.