டூ-வீலர்களைத் தேடி சென்று ‘பெட்ரோல் குடிக்கும்’ வினோத குரங்கு! வாகன உரிமையாளர்கள் அவதி
குரங்குகள் என்றால், இலை, காய், கனிகளையும், உணவுப் பொருட்களை சாப்பிட்டுதான் பார்த்து இருக்கறோம். ஆனால், அரியானா மாநிலம், பானிபட் நகரில் ஒரு குரங்கு, தாகம் எடுக்கும்போது இரு சக்கர வாகனங்களைத் தேடிச் சென்று பெட்ரோலைக் குடித்து வருகிறது.
இந்த வினோத குரங்கின் செயலால், நகரில் உள்ள வாகன ஓட்டிகள், அவதிப்பட்டு பட்டு வருகின்றனர்.
சாலை ஓரத்தில், மரத்தின் கீழ் நிறுத்தப்பட்டு இருக்கும் இரு சக்கர வாகனங்களைத் தேடிச் செல்லும் இந்த குரங்கு, வண்டியில் உள்ள பெட்ரோல் பைப்பை பல்லால் கடித்து பெட்ரோலைக் குடித்துவிடுகிறது. சில நேரங்களில் அந்த பெட்ரோல் பைப்பை கையில் பிடுங்கி, தன்னுடைய தாகம் தீரும் அளவுக்கு பெட்ரோலைக் குடித்து விட்டு செல்கிறது.
மோட்டார் சைக்கிளில் நிரப்பிய பெட்ரோலை இந்த குரங்கிடம் இருந்து பாதுகாக்க அந்த நகர மக்கள் பல்வேறு முயற்சிகள் செய்தபோதிலும் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. மக்கள் விழிப்புடன் இருந்தபோதிலும், எப்படியேனும் கண்களில் மண்ணைத் தூவி, நாள்தோறும் சில வாகனங்களில் பெட்ரோலை திருடி இந்த குரங்கு குடித்து விடுகிறது என்று வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.
நகரில் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் அந்த குரங்கு, அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும் மோட்டார்சைக்களில் இருக்கும் குழாயை பிடுங்கி, பெட்ரோலை குடித்துவிட்டு செல்கிறது. பெட்ரோல் குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கும் இந்த குரங்கு அப்பகுதி மக்களிடையே மிகுந்த பிரபலமாகி வருகிறது.