"அதிகார குவிப்புதான் மோடியின் ஜனநாயகமா?" - உத்தவ் தாக்கரே கடும் குற்றச்சாட்டு!
பிரதமர் மோடி அதிகாரம் அனைத்தும் குவித்து வைத்துள்ளார். இதுதான் ஜனநாயகமா? என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வுக்கு அந்த கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பேட்டி அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது-
மத்திய அரசின் விளம்பரங்களை எல்லாம் பார்க்கும் போது, அனைவருக்கும், அரசு சிறப்பாகச் செயல்படுகிறது என்றுதான் எண்ணுகிறார்கள். ஆனால், நிதர்சனத்தையும், உண்மையான சூழலையும் நாம் சோதித்து பார்க்க வேண்டும்.
சரக்கு மற்றும் சேவை வரியை(ஜி.எஸ்.டி) எடுத்துக்கொண்டால் ஜூலை 1-ந்ேதிமுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதிகாரத்தை குவிப்பதா அல்லது பரவலாக்குவது வேண்டுமா?. ராஜீவ் காந்தி பிதமராக இருந்தபோது, பஞ்சாயத்துராஜ் அமைப்புக்கு சுயாட்சி அதிகாரம் கொடுத்தார். ஆனால், பிரதமர் மோடி அந்த சுயாட்சியை பிடுங்கிக்கொண்டு, அதிகாரத்தை தன்னிடம் குவித்து வைத்துள்ளார்.
பிரதமர் யாராக இருக்கிறாரோ அவரைத்தான் அரசு நிர்வாகம் சார்ந்திருக்க வேண்டுமா? அல்லது அவர் விருப்பபடிதான் செயல்பட வேண்டுமா? நாட்டில் உண்மையில் ஜனநாயகம் இருக்கிறதா?
மக்களின் கருத்துக்களுக்கு ஏதேனும் மதிப்பு இருக்கிறதா?. சீர்திருத்தங்கள் கண்டிப்பாக தேவை. ஆனால், ஒருவர் ஒவ்வொரு நேரமும் சீர்திருத்தங்களை நிறுத்தி வைத்து, அதன் தாக்கத்தை அறி வேண்டும்.
ரூபாய் நோட்டு தடை காலத்துக்கு பின் 4 மாதத்தில் 15 லட்சம் மக்கள் வேலை இழந்துள்ளனர். அதாவது 60 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ரூபாய் நோட்டு தடையால் வந்தவை. வேலைவாய்ப்பை இழந்தவர்களுக்கு அரசு என்ன வழி சொல்லப்போகிறது, பொறுப்பு ஏற்கப்போகிறது?
மஹாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியை முறைப்படி செயல்படுத்தாவிட்டால், அரசின் செயல்பாடுகளை வெளிப்படுத்த சிவசேனாஒருபோதும் தயங்காது.
விவசாயிகள் தற்கொலையில் மட்டும் மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது என்று சொல்வது மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியால் பயன் அடைந்தவர்கள் விவரங்களையும் காட்சிப்படுத்த வேண்டும் என்று வங்கிகள் முன்பாக நடக்கும் போராட்டத்தில் தொண்டர்கள் முரசு கொட்டி தெரிவிக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் 36 லட்சம் விவசாயிகளின் கடன்தள்ளுபடியாகும், 89 லட்சம் விவசாயிகள் திட்டத்தால் பயன் அடைவார்கள் என அரசு கூறுகிறது. நாங்கள் அந்த விவசாயிகளின் பெயரைப் பார்க்க வேண்டும்.
உரம், விதை வாங்க ஒவ்வொரு விவசாயிக்கும். ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என அரசு கூறியது. ஆனால், 2500 விவசாயிகள்தான் பலனடைந்தனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.