Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவின் மொபைல் உற்பத்தி மையமாக மாறும் உ.பி.: முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்

கல்வி நிறுவனங்கள் மூலம் பெறப்படும் அறிவு தொழில்துறையுடன் இணைக்கப்படாவிட்டால், பிரதமரின் டிஜிட்டல் இந்தியா இயக்கம் வெற்றி பெறுவது கடினம் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகிறார்.

Uttar Pradesh to become India's mobile manufacturing hub: Yogi Adityanath is proud sgb
Author
First Published Sep 22, 2024, 1:12 PM IST | Last Updated Sep 22, 2024, 1:59 PM IST

நல்லாட்சியின் பலத்தால் மிகவும் கவர்ச்சிகரமான முதலீட்டு களமாக உத்தரப் பிரதேசம் மாறியுள்ளது என்றும், மொபைல் போன் உற்பத்தியில் நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமாக உள்ளது என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களில் 55 சதவீதம் உ.பி.யில் தயாரிக்கப்பட்டவை. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 60 சதவீத மொபைல் உதிரிபாகங்களும் உத்தரபிரதேசத்தில் தயாரிக்கப்படுகின்றன. உ.பி.யில் உள்ள மூதலீட்டு வாய்ப்புகள் சாத்தியக்கூறுகள் காரணமாக, சாம்சங் உலகின் முதல் மொபைல் டிஸ்ப்ளே தயாரிப்பு ஆலையை சீனாவிலிருந்து உத்தரபிரதேசத்திற்குக் கொண்டுவந்துள்ளது. இன்று நாட்டின் வளர்ச்சி மற்றும் முதலீட்டு வளர்ச்சியில் முக்கிய பகுதியாக உ.பி. உருவாகி வருகிறது.

சனிக்கிழமை பிற்பகல் தீன்தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகத்தின் தீக்ஷா பவனில் சாம்சங் இன்னோவேஷன் கேம்பஸ் ஏற்பாடு செய்த சான்றிதழ் வழங்கும் விழாவில் முதல்வர் யோகி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், கோரக்பூர் பல்கலைக்கழகம் மற்றும் ஐடிஎம் (தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனம்) ஆகியவற்றின் சுமார் 600 பி.டெக் மாணவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. எட்டு மாணவர்களுக்கு முதல்வர் தன் கையால் சான்றிதழ் வழங்கினார்.

2017ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய மொபைல் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நொய்டாவில் உள்ள தனது ஆலையை மூட விரும்புவதாகக் கூறினர். யோகி முதல்வர் ஆன பிறகு சாம்சங் அதிகாரிகளை அழைத்து பேசினார். அவர்களின் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் விளைவாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஆகியோர் 2018இல் சாம்சங்கின் உலகின் மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தனர்.

முதல்வர் யோகி ஆதித்யநாத், சாம்சங் நிறுவனத்தைப் பாராட்டியதோடு, உ.பி. மாணவர்கள் சாம்சங்கின் நொய்டா ஆலையைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார். இதன் மூலம் சாம்சங் இன்னோவேஷன் வளாகத்தில் பயிற்சி பெற்ற 3500 மாணவர்களுக்கு நடைமுறை அறிவுடன் தொழில்துறையின் சவால்களையும் புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்றார். கல்வி நிறுவனங்கள் மூலம் பெறப்படும் அறிவு தொழில்துறையுடன் இணைக்கப்படாவிட்டால், பிரதமரின் டிஜிட்டல் இந்தியா இயக்கம் வெற்றி பெறுவது கடினம் என்றார்.

இன்றைய காலகட்டத்தில் தேவைக்கேற்ப சப்ளை சந்தையை உருவாக்குவதே மிகப்பெரிய தேவை என்று முதல்வர் யோகி கூறினார். சமுதாயத்தின் தேவைக்கேற்ப சந்தையை வடிவமைக்காவிட்டால், வேலையில்லாதவர்கள் பட்டாளம் அதிகரிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அடுத்த 20-25 ஆண்டுகளுக்கு இளைஞர்களுக்கு பயனளிக்கக்கூடிய இதுபோன்ற படிப்புகளை கல்வி-பயிற்சி நிறுவனங்கள் தயாரிப்பது அவசியமாகிறது. கல்வி நிறுவனங்கள் பிராந்தியம், நாடு மற்றும் உலகத்தின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப படிப்புகளை நடத்த வேண்டும். பழமையான வழக்கத்தையே பின்பற்றிக்கொண்டிருந்தால் பின்தங்கிவிடுவோம் என்றும் யோகி தெரிவித்தார்.

முதல்வர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம், கல்வி நிறுவனங்களின் வளாகங்களிலிருந்தே 'தன்னிறைவு இந்தியா' என்ற நோக்கம் நிறைவேறுவதை அரசு காணப் போகிறது என்றார். தொடர்ந்து பேசிய முதல்வர், வளாகத்திலேயே பயிற்சி அளிப்பதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை அல்லது ஸ்டார்ட்அப் தொடங்க உத்தரவாதம் அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில், இறுதியாண்டு மாணவர்களின் திட்டப் பணிகள், தொழில் துறையில் இன்டர்ன்ஷிப்புடன் இணைக்கப்படும் என்றார்.

தீன்தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் சமூக தாக்க ஆய்வை மேற்கொள்ளுமாறு யோகி அழைப்பு விடுத்தார். ஏனெனில் எந்தவொரு முதலீட்டாளரும் ஒரு ஆலை அமைப்பதற்கு முன்பு அல்லது முதலீடு செய்வதற்கு முன்பு அந்தப் பகுதியின் சமூக பாதிப்புகளை ஆய்வு செய்வார்கள். இதற்காக அரசாங்கமே பல கோடி ரூபாய் செலவழிக்கிறது. இந்தப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து அல்லது இந்தப் பகுதியின் வரலாறு குறித்து சமூகத் தாக்க ஆய்வு மேற்கொள்ளலாம் என்றார். மேலும், இதற்கு அரசு பணம் கொடுக்கும் என்ற முதல்வர், இதன் மூலம் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பது மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு புதிய அனுபவத்தையும் அளிக்கும் என்றார்.

உ.பி., இன்று நாட்டின் வளர்ச்சி மற்றும் முதலீட்டின் ஒரு பகுதியாக மாறி வருகிறது என்றார். 2017ல் அவரது அரசு பதவிக்கு வந்ததும் முதலீட்டுக்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன. அரசு குற்றங்களைச் சகித்துக்கொள்ளாமல் நடவடிக்கை எடுத்தது. அடுத்த ஆறு மாதத்தில், உ.பி.யில் 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு சாத்தியமாகும் என மதிப்பிடப்பட்டது. சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவதுடன், 27 வெவ்வேறு துறைகளுக்கான கொள்கைகளை அரசாங்கம் உருவாக்கியது. எந்த மாநிலத்திலும் இது போன்ற கொள்கை இல்லை.

நிவேஷ் மித்ரா போர்ட்டல் மூலம் 450 வகையான என்ஓசிக்கான தளம் உருவாக்கப்பட்டது. நிவேஷ் சாரதியிடம் இருந்து MOU கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உற்பத்திக்குப் பிறகு ஆன்லைன் ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. 20,000 கோடியே முதலீடு செய்யப்பட்ட மாநிலத்தில், 2023ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில், 40 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டங்கள் பெறப்பட்டன. இந்த திட்டங்களின் நேரடி பலனாக 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த வேலைவாய்ப்புக்கு ஏற்ப இளைஞர்களை டிஜிட்டல் மயமாக்கும் வகையில், சுவாமி விவேகானந்தர் திட்டத்தின் கீழ் 2 கோடி டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் வழங்கும் திட்டத்தை உ.பி. அரசு தொடங்கியுள்ளது என்றார்.

செப்டம்பர் 12ஆம் தேதி கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற செமிகான் இந்தியா நிகழ்வில், செமி கண்டக்டர்களை உருவாக்க இந்தியா மூன்று முதலீட்டுத் திட்டங்களைப் பெற்றதாக முதல்வர் கூறினார். அந்த மூன்று முதலீடுகள் மூலம் உ.பி.யில் தலா ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்றார்.

மாணவர்கள் ஆறு மணி நேரத்திற்கு பதிலாக 12 முதல் 14 மணி நேரம் வேலை செய்யும் பழக்கத்தை உருவாக்குங்கள். வேலை செய்வதால் புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள முடியும். மேலும் உழைத்தால் மட்டுமே பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியாவை வலுப்படுத்த முடியும் என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.

நிகழ்ச்சியில் முதலமைச்சரை வரவேற்று, கோரக்பூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர். பூனம் டாண்டன் சாம்சங் இன்னோவேஷன் கேம்பஸின் இந்தப் பயிற்சித் திட்டத்தின் மூலம் நமது இளைஞர்கள் புதிய வாய்ப்புகளில் சேரவும், டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஒரு அங்கமாக மாறவும் தயாராக உள்ளதாக தெரிவித்தார். இளைஞர்களின் நலனுக்காக முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்து வரும் முயற்சிகளை குறிப்பிட்டு, இளைஞர்களின் திறன் மேம்பாடு, அவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றில் முதல்வர் யோகி புதிய சாதனைகளை படைத்து வருகிறார் என்றார்.

சாம்சங் தென்மேற்கு ஆசியாவின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஜேபி பார்க், உத்தரப் பிரதேசத்தை முதலீட்டு மாநிலமாக மாற்றியதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத்தைப் பாராட்டினார். சட்டம் மற்றும் ஒழுங்கில் கவனம் செலுத்தி, உ.பி.யை முதலீட்டு மையமாக முதல்வர் யோகி உருவாக்கியுள்ளதாக பார்க் கூறினார். உ.பி.யில் சாம்சங் நிறுவனத்தை ஆதரித்ததற்காக முதலமைச்சருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இந்திய மின்னணுவியல் துறை திறன் கவுன்சிலின் (ESSCI) தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அபிலாஷா கவுர் கூறுகையில், கோரக்பூர் பல்கலைக்கழகம், சாம்சங், ESSCI மற்றும் ஸ்வதேஷ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளன. சாம்சங்கின் இந்த CSR முயற்சியின் மூலம், செயற்கை நுண்ணறிவு (AI), குறியீட்டு முறை, பிக் டேட்டா மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் ஆகியவற்றைக் கற்கும் வாய்ப்பை மாணவர்கள் பெற்றுள்ளனர் என்றார். கோரக்பூர் பல்கலைக்கழக மாணவர்களில், 150 மாணவர்களுக்கு கோடிங் மற்றும் புரோகிராமிங்கிலும், 100 பேருக்கு செயற்கை நுண்ணறிவிலும், 50 பேருக்கு பிக் டேட்டாவிலும், 50 பேருக்கு இன்டர்நெட் ஆஃப் திங்கிலும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆண்டின் இறுதியில், சாம்சங் டாப்பர்ஸ் மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் அதன் பிரத்யேக தயாரிப்புகளை வழங்கும் எனவும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோரக்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த தொழில்நுட்ப கண்காட்சியையும் முதல்வர் பார்வையிட்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios