“வதந்தியை பரப்புரதே நம்ம பயலுகளுக்கு வேலையா போச்சு…” 10 ரூபாய் நாணயங்கள் செல்லதா…?
மதுரையில் 10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகளும், பஸ் கண்டக்டர்களும் வாங்க மறுப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த நாணயங்கள் செல்லும் என வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர்.
மத்திய அரசு கடந்த 8ம் தேதி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்த்து. இதையடுத்து, பழைய நோட்டுகளை வங்கிகளில் இம்மாதம் 30ம் தேதி வரை டெபாசிட் செய்யலாம் என அவகாசமும் வழங்கியது. இதைதொடர்ந்து, புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளியானது.
தற்போது, புதிய 500 ரூபாய் நோட்டுகள் ஒரு சில வங்கிளுக்கு வந்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில் போதிய அளவில 500 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வரவில்லை. இதனால், பொது மக்கள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என வியாபாரிகளும், பஸ் கண்டக்டர்களும் வாங்க மறுப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சில இடங்களில் 10 ரூபாய் நாணயத்தின் நடுவில் ரூ.10 என எழுத்துடன் பக்கவாட்டில் 11 கோடுகள் இடம் பெற்றிருக்கும் நாணயங்களை வாங்குகின்றனர்.
நடுவில் ரூ என்கிற எழுத்து இல்லாமல் 10 மட்டும் இருந்து, 15 கோடுகள் இடம் பெற்றிருக்கும் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர். மதுரை அருகே சில நகர பஸ்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து சில பயணிகளை இடையில் இறக்கிவிட்டுள்ளனர்.
சிறுக, சிறுக வீடுகளில் டப்பாக்களில் சேமித்து வைத்த நாணயங்களுக்கும் சிக்கல் வந்துவிட்டதாக பொது மக்கள் புலம்புகின்றனர்.
இது குறித்து வங்கி அதிகாரிகளிம் விசாரித்தபோது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தவிர, பிற ரூபாய் நோட்டுகள், நாணயங்களுக்கு மதிப்பு நீக்கம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. சிலர் தேவையின்றி கிளப்பிவிட்ட தகவலால் வாங்க மறுப்பதாக தெரிகிறது.
வர்த்தக நிறுவனங்கள், பஸ்களில் ரூ.10 நாணயத்துக்கு தடை ஏதுமில்லை. அரசு வெளியிட்ட அனைத்து வகை 10 ரூபாய் நாணயங்களும் செல்லும். தாராளமாக வாங்கலாம். வீணாக வதந்தியை பரப்ப வேண் டாம் என்றார்.