காவி மீண்டும் நீல நிறமானது! பழைய நிலைக்கு மாறிய அம்பேத்கர் சிலை!
உத்தரபிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய காவி நிறத்தில் இருந்த அம்பேத்கர் சிலை மீண்டும் நீல நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன. அவற்றை சீரமைக்கும் பணிகளில் மாநில அரசு தீவிரம்
காட்டி வருகிறது.
உத்தரபிரதேசத்தில் படாவுன் நகரத்தை ஒட்டியுள்ள துக்ரைய்யா கிராமத்தில் இருந்த அம்பேத்கர் சிலை, கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.
அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதால், அங்கு போராட்டம் வெடித்தது. கிராம மக்கள் அம்பேத்கர் சிலையைச் சீரமைத்துத் தர வேண்டும் என்று படாவுன் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினர்.
இந்த நிலையில், சீரமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை நேற்று ஆக்ராவில் இருந்து துக்ரைய்யா கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. அந்த சிலையைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு காரணம், நீல நிறமாக இருந்த அம்பேத்கர் சிலை, முழுவதும் காவி நிறம் பூசப்பட்டிருந்து. அம்பேத்கரின் கோட்டுக்கும் காவி வண்ணம் அடிக்கப்பட்டிருந்தது. கழுத்திலும் காவி நிற மாலை போடப்பட்டிருந்தது.
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பின்னர் அரசு பள்ளிகள், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பள்ளிக்கூட பைகள், பேருந்துகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என அனைத்தும் காவி வண்ணத்துக்கு மாற்றப்பட்டது. லக்னோவில் உள்ள ஹஜ் இல்லத்தின் வெளிப்புற சுவருக்கும் காவி வர்ணம் பூசப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அம்பேத்கர் சிலைக்கு காவி வர்ணம் அடித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அம்பேத்கர் இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனை அடுத்து, அந்தப் பகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஹேமந்த்ரா கவுதம், காவி நிறத்தை அழிக்க முடிவு செய்தார். அதன்படி இன்று நீல நிற பெயின்ட் அடிக்கப்பட்டு சிலையின் நிறம் மாற்றப்பட்டது.