உத்தரப் பிரதேசம் ஆக்ராவில், கார் ஓட்டும்போது ஹெல்மெட் அணியவில்லை என காவல்துறை அபராதம் விதித்ததால், குல்ஷன் என்ற ஆசிரியர் ஒருவர் தற்போது காரை ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து செல்கிறார். இந்த வினோத சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் ஒரு வினோதமான சம்பவம் திங்கட்கிழமை அரங்கேறியது. அண்மையில் காவல்துறையினர் அபராதம் விதித்ததன் காரணமாக, ஒரு நபர் தனது காரை ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்தபடி செல்லும் காட்சி வெளியாகி உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆசிரியர் தொழிலைச் செய்து வரும் குல்ஷன் என்ற அந்த நபர், கடந்த நவம்பர் 26ஆம் தேதி தனது நான்கு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி காவல்துறை அவருக்கு ரூ.1,100 அபராதம் விதித்ததாகக் கூறப்படுகிறது.

ஹெல்மெட் அணியவில்லை என அபாரதம்

வெளியாகியுள்ள ஒரு காணொளியில் குல்ஷன் பேசுகையில், "நான் சீட் பெல்ட் அணிந்திருந்தேன். ஆனால், ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி காவல்துறை எனக்கு அபராதம் விதித்தது" என்று தெரிவித்துள்ளார்.

சட்டம், விதிமுறைகளுக்குக் கட்டுப்படும் குடிமகன் தான் என்று கூறிய குல்ஷன், அபராதம் விதிக்கப்பட்டதிலிருந்து அவர் கார் ஓட்டும்போதெல்லாம் ஹெல்மெட் அணிந்து செல்வதாகவும், எதிர்காலத்தில் மீண்டும் சலான் வராமல் இருக்கத் தொடர்ந்து அவ்வாறே செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

உ.பி.யில் தொடரும் வினோதம்

உத்தரப் பிரதேசத்தில் கார் ஓட்டுபவர்களுக்கு ஹெல்மெட் அணியாததற்காகத் தவறுதலாக அல்லது விசித்திரமான முறையில் அபராதம் விதிக்கப்படுவது இது முதல்முறை அல்ல.

இதுபோன்ற நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் விவாதங்களையும், நகைச்சுவையான கருத்துகளையும் அடிக்கடி உருவாக்கி வருகின்றன. மோட்டார் வாகனச் சட்டங்களின்படி, ஹெல்மெட் அணிய வேண்டியது இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.