சட்டீஸ்கர் சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் கடந்த 5 ஆண்டுகளாக துவைக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. இதனால் கைதிகளுக்கு தோல் நோய்கள் பரவியதை தொடர்ந்து, 50 ஆயிரம் போர்வைகளை ரூ. 40 லட்சம் செலவில் துவைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
18 ஆயிரம் கைதிகள்
சட்டீஸ்கர் மாநிலத்தில் 5 மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. 12 மாவட்ட சிறைகளும், 16 கிளை சிறைகளும் செயல்பட்டு வருகின்றன. இங்கு 18 ஆயிரத்துக்கும் அதிகமான கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 10,000 பேர் விசாரணை கைதிகள் என்றும், 8,000 பேர் தண்டனை கைதிகள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தோல் நோய் பாதிப்பு
இவர்களின் பயன்பாட்டிற்காக நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 2 அல்லது 3 போர்வைகளை சிறை நிர்வாகம் வழங்குகிறது. அந்த வகையில் 54 ஆயிரம் போர்வைகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், சிறைக் கைதிகளுக்கு அவ்வப்போது தோல் நோய்கள் ஏற்பட்டன. கைதிகளுக்கு மட்டும் நோய் ஏற்பட்டு வந்தது அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.
5 ஆண்டுக்கு முன்
இதன் அடிப்படையில் கைதிகளிடம் உடல் பரிசோதனை மேற்ெகாள்ளப்பட்டது. இதில் பெரும்பான்மையினருக்கு தோல் நோய்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியது முதற்கொண்டு துவைக்கப்படாத போர்வைகளை பயன்படுத்தியதுதான் காரணம் என தெரியவந்துள்ளது.
ரூ. 40 லட்சம்
இதுகுறித்து மாநில சிறைத்துறை இயக்குனர் கிரிதர் நாயக் கூறுகையில், கைதிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் அனைத்தையும் துவைப்பதற்கு முடிவு செய்துள்ளோம். இதற்காக வாஷிங் மெஷின்களை ரூ. 40 லட்சம் செலவில் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விரைவில் போர்வைகளை துவைக்கும் பணி தொடங்கி விடும். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 500 போர்வைகள் துவைக்கப்படும். இதன் அடிப்படையில் 4 மாதங்களுக்குள் இந்த பணிகள் முடிவடையும் என்று கூறினார்.
மாநிலத்தில் அதிர்ச்சி
சட்டீஸ்கர் சிறைச் சாலைகளில் கைதிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் பயன்பாட்டிற்கு பின்னர் துவைக்கப்படுவதில்லை. இதற்கு பதிலாக அவை வெயிலில் மட்டுமே காய வைக்கப்படுகின்றன.
பின்னர் இவை மீண்டும் கைதிகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே போர்வையை 100-க்கும் அதிகமானோர் பயன்படுத்தியுள்ளனர். இந்த தகவல்கள் சட்டீஸ்கரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
