uma bharathi says that she will die for ramar temple
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக என் உயிரைக்கூட கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்று மத்திய அமைச்சர் உமா பாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு இருந்த பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
இதையடுத்து, டெல்லியில் நிருபர்களுக்கு மத்திய அமைச்சர் உமா பாரதி நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது என்பது எனது கனவு. அயோத்தில் ராமர் கோயில் கட்டுவதற்காக சிறை செல்லவும், தூக்கில் தொங்கவும் நான் தயார். இன்று இரவு நான் அயோத்தி சென்று ராமர்கோயிலில் ஆசி பெற இருக்கிறேன்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் எனது பெயர், பங்கு இருக்கிறது என்பதை நான் பெருமையாக நினைக்கிறேன், இதற்காக நான் யாரிடமும் மன்னிப்பு கோரப்போவதில்லை. ராமர் கோயில் கட்டுவதற்காக நான் தொடர்ந்து போராடுவேன். இதற்காக எத்தகைய தண்டனைகள் அளித்தாலும் அதை எதிர்கொள்ளத் தயார்.
என் மீது சதித்திட்டம் தீட்டியதாக வழக்கு இருக்கிறது. இந்த குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். நான் எந்த சதித்திட்டமும் தீட்டவில்லை. அனைத்தையும் நான் வெளிப்படையாகவே செய்தேன். ராமர் கோயில் கட்டும் பிரசாரத்தை நான் பெருமையாக, நம்பிக்கையுடன் தான் செய்தேன். தேசியக் கொடியின் நலனுக்காக நான் எனது முதல்வர் பதவியை துறந்தவள் என்பது உங்களுக்கு தெரியுமா.
ராமர் கோயில் கட்டுவதற்காக என்னால் என்ன முடியுமோ அதை நான் செய்வேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். இதை தடுப்பதற்கான சக்தி யாருக்கும் இல்லை. சீக்கியர்களுக்கு எதிரான போராட்டம் நடக்கும் போது சோனியா காந்தி ராஜீவ் காந்தி இல்லத்தில் இருந்தார். அதற்காக சீக்கியர் போராட்டத்தில் சதித்திட்டம் தீட்டினார் என்பதாக இவ்வாறு அவர் தெரிவித்தார்.
