இறந்த மகன் செல்களிலிருந்து இரட்டை குழந்தைகள்..! மனதை உருக்கும் சம்பவம்...!
இறந்து போன மகனின் செல்களை சேகரித்து,அதன் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது
புனேயைச் சேர்ந்த 27 வயது வாலிபர் பிரதாமேஷ் மேல்படிப்புக்காக 2010-ம் ஆண்டு ஜெர்மனி சென்றார்.
அப்போது அவருக்கு மூளை புற்றுநோய் தாக்கி உள்ளது. பின்னர் சிகிச்சையில் இருந்த பிரதா மேஷ், அவர் சிகிச்சை பெற்று வந்த ஜெர்மனி மருத்துவமனையில் அவருடைய விந்தணுக்களை சேகரிக்க வேண்டுகோள் விடுத்தார்.
பின்னர் இந்தியா திரும்பிய இவர்,சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்தார்.
இந்த நிகழ்வு அவருடைய குடும்பத்தினரை பெரிதும் பாதித்தது.பின்னர்,ஜெர்மனி மருத்துவமனையில் தன் மகனின் விந்து செல்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதை அறிந்து, மருத்துவமனையை தொடர்பு கொண்டனர்.
அதே சமயத்தில்,செயற்கை கருவூட்டலுக்காக புனேயில் உள்ள மருத்துவமனையை அணுகினர்.அங்கு, வாலிபரின் விந்து செல்களுடன் தானமான பெற்ற கருமுட்டைகளை சேர்த்து ஆய்வகத்தில் கரு உயிர் வளர்க்கப்பட்டது.பின்னர்,அது வாலிபரின் உறவுக்காரப் பெண்ணின் கருப்பையில் செலுத்தப்பட்டது.
அந்த கரு ஆரோக்கியமாக வளர்ந்த நிலையில்,அந்த பெண்ணிற்கு கடந்த திங்கட்கிழமை இரட்டை குழந்தைகள் பிறந்தன.
இறந்து போன தன் மகன் திரும்ப கிடைத்து விட்டதாக பிரதாமேஷின் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
மேலும், திருமணம் ஆகாமலும்,உயிருடனும் இல்லாமலும் இருக்கும் சூழ்நிலையில், பிரதாமேஷின் இரட்டை குழந்தை வாரிசு மிகவும் ஆச்சர்யமாகவும்,அதே சமயத்தில் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.