குஷன் இருக்கைகள், எல்.இ.டி.விளக்குகள், சுத்தமான குடிநீர், பயோ கழிப்பறை என நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட சாமானியர்களுக்கான, முற்றிலும் முன்பதிவு அல்லாத பயணிகளுக்கான அந்தோதயா ரெயில் பெட்டிகள் நேற்று அறிமுகம் செய்யப்பட்டன.

புதுடெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்த பெட்டிகளை ரெயில்வே துறை அமைச்சர் சுரேஷ்பிரபு அறிமுகம் செய்தார். மக்கள் அதிகம் பயணிக்கும் வழித்தடங்களான மும்பை மற்றும் டாடா நகர், எர்ணாகுளம் மற்றும் ஹவுரா இடையே விரைவில் அந்தோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது.

இது குறித்து மத்தியஅமைச்சர் சுரேஷ் பிரபு நிருபர்களிடம் நேற்று கூறுகையில், “ ரெயில்வே பட்ஜெட்டில் 4 புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்களை அறிமுகப்படுத்தினோம்.

முதலாவு ஹம்சபர் எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது, இப்போது அந்தோதயா எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

அந்தோதயா என்பது சாமானிய மக்களுக்கானது. முதல்வகுப்பு பெட்டியில் இருக்கும் அனைத்து வசதிகளும் இந்த பெட்டியில் இருக்கும்.

சாமானிய மக்களுக்கும் இந்த வசதிகளும் கிடைக்கும் என்ற நோக்கில் இந்த அரசு இந்த பெட்டிகளை அறிமுகம் செய்துள்ளது. இதில் எல்.இ.டி. விளக்குகள், சுத்தமான குடிநீர் வசதிகள், பயோ கழிப்றைகள், மொபைல் சார்ஜிங், குஷன் இருக்கைகள் என பல வசதிகள் இருக்கின்றன.

இந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கான டிக்கெட் கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை, விரைவில் அரசு அறிவிக்கும்'' என்றார்.

அந்தோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் டிக்கெட் கட்டணம் வழக்கமான டிக்கெட் கட்டணத்தைக் காட்டிலும் 10 முதல் 15 சதவீதம் அதிகமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.