ஜுலை 1 முதல் அமலாகும் ஜிஎஸ்டி …. இறுதி வரி விகிதங்களை முடிவு செய்ய டெல்லியில் இன்று கவுன்சில் கூட்டம்
நாடு முழுவதும் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள சரக்கு மற்றும் சேவை வரியில், இறுதி வரி விகிதங்களை முடிவு செய்ய 16-வது கவுன்சில் கூட்டம் இன்று டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ளது. அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வருகிறது.
இந்த வரி விதிப்பை அமல்படுத்த அமைக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில், ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரி விகிதங்களை முடிவு செய்துள்ளது.
வரி தொடர்பாக, பல மாநிலங்கள், மாற்று கருத்தை கொண்டுள்ளன.
அவற்றை தீர்ப்பதற்காக, 18 துறைகளுக்கான குழுக்களை, மத்திய அரசு அமைத்துள்ளது. அதில், தமிழகத்திற்கு மிக பெரிய அங்கீகாரமாக, 17 குழுக்களில் இடம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெறவுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெறவுள்ள இந்த 16-வது கவுன்சில் கூட்டத்தில், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
இன்று நடைபெறும் இந்த கூட்டம்தான் ஜிஎஸ்டி தொடர்பான இறுதிக் கூட்டமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.