இன்னைக்கு முழுவதும் மெடிக்கல் ஷாப் இல்ல !! ஆன்-லைன் வர்த்தகத்தைக் கண்டித்து கடை அடைப்பு …
ஆன்லைனில் மருந்தகள் விற்பனை செய்யக் கூடாது என வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் 8 லட்சம் மருந்துக் கடைகளும், தமிழகத்தில் 35 ஆயிரம் மருந்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று நள்ளிரவு 12 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டிருக்கும்.
ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க வரைவு அறிக்கை கடந்த மாதம் 28-ந் தேதி வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆன்லைன் மருந்து வணிகம் கூடாது. ஆன்லைன் மருந்து விற்பனை பொதுமக்களுக்கு ஆரோக்கியமற்றது ஆகும். டாக்டரின் பரிந்துரையில் மட்டுமே விற்கவேண்டிய மருந்துகள் தவறான பயன்பாட்டால் நமது சமுதாயத்தை சீரழிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். ஆன்லைன் மருந்துகளின் ஆதிக்கம் அதிகமானால் கிராமப்புறம் மற்றும் சிறிய நகரங்களில் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பது அரிதாகிவிடும்.
மேலும் ஆன்லைன் மருந்து வணிகம் நடைமுறைக்கு வந்தால், மருந்து கடை தொழிலையே நம்பி இருக்கும் 8 லட்சம் பேர் நேரடியாகவும், 40 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும், அவர்களுடைய குடும்பத்தினரும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும்.
இதனால் ஆன்லைன் மருந்து வணிகத்துக்கு அனுமதி அளிக்க இருக்கும் மத்திய அரசின் முடிவினை எதிர்த்து அகில இந்திய அளவில் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தியா முழுவதும் 8 லட்சம் கடைகள் அடைக்கப்படுகின்றன. தமிழகத்தில் 35 ஆயிரம் மருந்து கடைகள் இருக்கின்றன. இதில் மருத்துவமனைக்குள் உள்ள 5 ஆயிரம் கடைகளை தவிர, மீதம் உள்ள 30 ஆயிரம் கடைகளும் அடைக்கப்பட்டு தான் இருக்கும்.
மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து இன்று ஆர்ப்பாடடமும் நடைபெறவுள்ளது.