இன்று முதல் ஒரு லிட்டர் பாலின் விலையில் ரூ.2 உயர்த்துவதாக இந்தியாவின் பிரபல பால் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு, காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் பெரும் சிரமத்தில் பொதுமக்கள் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் வாங்கும் சம்பளம் இதுபோன்ற செலவுகளுக்கு போதுமான அளவில் இல்லை என்று பொதுமக்கள் கதறுகின்றனர். அந்த அளவுக்கு விலைவாசி உயர்வு வாட்டி வதைக்கிறது. அதோடு பால் விலை உயர்வும் கடுமையாக உள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நாட்டின் மிகப்பெரிய பால் தயாரிப்பு நிறுவனமான அமுல் (அமுல் பால் ரேட்) தனது பாலின் விலையை உயர்த்தியுள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் (இன்று) நாடு முழுவதும் அதன் பாலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு குறித்து அமுல் நிறுவனம் கூறும்போது, 2 ரூபாய் அதிகரிப்பு 4% மட்டுமே, இது சராசரி உணவு பணவீக்கத்தை விட மிகக் குறைவு என்று தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், அமுல் தனது புதிய பால் வகையின் விலையை ஆண்டுக்கு 4 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிசக்தி, பேக்கேஜிங், போக்குவரத்து மற்றும் கால்நடை தீவனத்தின் விலை அதிகரிப்பு, பால் உற்பத்தி செலவு அதிகரிப்பதற்கு வழிவகுத்தது, ஒட்டுமொத்த செயல்பாட்டு செலவு அதிகரிக்கிறது என்றும் கூறியுள்ளது.

அமுல் நிறுவனம் அறிவிப்பால் பணவீக்கத்தால் சாமானியர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. புதிய விலையின்படி, அகமதாபாத் மற்றும் சௌராஷ்டிரா சந்தைகளில் அமுல் கோல்டு பால் 500 மில்லிக்கு ரூ.30, அமுல் தாசா 500 மில்லிக்கு ரூ.24 மற்றும் அமுல் சக்தி 500 மில்லிக்கு ரூ.27 ஆக இருக்கும் என்பது குறிப்பிடப்படுகிறது.

இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றாலும், பால் உற்பத்தியாளர்களுக்கு இது வெகுவாகப் பயனளிக்கும். அமுல் நிறுவனத்தின் கொள்கைப்படி, பாலுக்காக பொதுமக்கள் செலவிடும் ஒரு ரூபாயில் சுமார் 80 பைசாவை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதே நோக்கம் என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.