பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரையும் பாதித்த போதிலும், திருப்பதி திருமலை கோயில் உண்டியலை மட்டுமே பாதிக்கவே இல்லை.
அங்கு வழக்கத்துக்கு மாறாக, கூடுதலாக ரூ.8 கோடி காணிக்கையாக மக்கள் செலுத்தியுள்ளனர். தங்கம், வெள்ளி, பணம் என காணிக்கையாக கடந்த 10 நாட்களில் ரூ.30 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி கோயில்
ரூ.500, ரூ.1000 நோட்டை செல்லாது என மத்திய அரசு கடந்த 8-ந்தேதி அறிவித்தது. அதைத்தொடர்ந்து மக்களிடம் இருந்த பணப்புழக்கம் பாதிக்கு மேல் குறைந்துவிட்டது. பணத்துக்காக ஏ.டி.எம். வாசலிலும், வங்கி, தபால்நிலையத்தின் வாசலிலும் மக்கள் காத்துக்கிடக்கிறார்கள். இதனால், கோயில்களில் நேர்த்திக் கடன் செலுத்தும் மக்கள் கூட்டம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எப்போதும் போல திருப்பதி கோயிலில் கூட்டமும், காணிக்கையும் வந்துகொண்டே இருக்கிறது.

ரூ.1000 கோடி
இது குறித்து திருப்பதி திருமலை வெங்கடேஸ்வரா கோயிலில் மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் தலரி ரவி கூறுகையில், “ ஓர் ஆண்டு முழுவதும் திருப்பதி திருமலை கோயிலுக்கு ரூ.1000 கோடி காணிக்கையாக கிடைக்கும். ஆனால், பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பால், கோயிலின் உண்டியல் காணிக்கையில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
ரூ.3 கோடி
நாள்தோறும் சராசரியாக உண்டியலில் ரூ.3 கோடி காணிக்கை விழுந்து கொண்டே இருக்கிறது. நாடு முழுவதிலும் இருந்து வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி, பணம் என காணிக்கைகளை செலுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
கூடுதலாக
கடந்த 10 நாட்களில் அதாவது, 9-ந் தேதியில் இருந்து, ரூ.30.36 கோடி உண்டியலில் காணிக்கையாக வந்துள்ளது. இது கடந்த ஆண்டு இந்த காலத்தில் காணிக்கையாகக் கிடைத்ததைக் காட்டிலும் ரூ.8 கோடி அதிகமாகும்.
அதிகபட்சமாக கடந்த 17-ந்தேதி ரூ.3.53 கோடியும், குறைந்தபட்சமாக கடந்த 10-ந்தேதி ரூ.2.28 கோடியும் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. இதில் சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய ரூ.2000 நோட்டு, ரூ.500 நோட்டுகளும் உண்டியலில் வந்துள்ளன'' எனத் தெரிவித்தார்.
