திருப்பதியில் தரிசனத்துக்கு செல்ல பக்தர்களுக்கு தடை...!!!
திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் 9 முதல் 17-ம் தேதி வரை தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பாபிஷேகம் ஆகஸ்ட்12-ம் தேதி முதல் 16 வரை நடப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் அறிவித்துள்ளார். திருப்பதியிலிருந்து திருமலைக்கு வாகனம், மலைப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 17-ம் தேதி மாலை 6 மணிக்கு பிறகே திருமலை செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர் யாதவ் கூறியுள்ளார். முதல் முறையாக திருப்பதியில் கும்பாபிஷேகத்தின் போது பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஏற்பட்ட பிறகு 1958, 1970, 1982, 1994, 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த காலங்களில் நடந்த கும்பாபிஷேகத்தின் போது பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. ஆனால் தற்போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சாதாரண நாட்களில் சுமார் 50 ஆயிரம் பேரும், வார விடுமுறை விடுமுறை நாட்களில் 70 முதல் 1 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு திருப்பதி கோயிலில் ஆகஸ்ட் 9 முதல் 17-ம் தேதி வரை தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.