ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது பற்றிய ஒப்பந்தத்தில் விதிமீறலா..! - ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி...!
ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது பற்றிய ஒப்பந்தம் கையெழுத்தானதில் எவ்வித விதிமீறலும் இல்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘டிசால்ட்’ என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது.
இதன் மூலம் டிசால்ட் நிறுவனம், இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துடன் இணைந்து விமானங்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், பா.ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் இந்த ஒப்பந்தத்தை 2015ம் ஆண்டு ஜூன் 30ந்தேதி ரத்து செய்தது. அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பிரான்ஸ் நிறுவனம் ரபேல் விமானங்களை தயாரிக்கும் வகையில் ஒப்பந்தத்தை மாற்றி அமைத்தது.
ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானிக்கு ஆதரவாக பிரதமர் மோடி செயல்படுவதால், அரசுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது பற்றிய ஒப்பந்தம் கையெழுத்தானதில் எவ்வித விதிமீறலும் இல்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மனோகர்பாரிக்கரின் ஒப்புதலுடன் தான் ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது பற்றிய ஒப்பந்தம் கையெழுத்தானது என்று நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.