‘நில அபகரிப்பு மாபியா’ கும்பல் இருக்க கூடாது -தனிப் படை அமைத்தார் ஆதித்யநாத்
உத்தரப்பிரதேசத்தில் அரசின் நிலங்களை அபகரிக்கும் மாபியா கும்பலைத் தடுக்கும் வகையில், சிறப்பு படையை அமைத்து முதல்வர் ஆதித்தநாத் ஆணையிட்டுள்ளார்.
தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதியாக இது இருந்த நிலையில், அதை இப்போது ஆதித்யநாத் அரசு நிறைவேற்றியுள்ளது.
உத்தரப்பிரதேச முதல்வராக ஆதித்யநாத் பொறுப்பு ஏற்றதில் இருந்து பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளான விவசாய கடன் தள்ளுபடி, பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஆன்ட்டி ரோமியோ படை, விவசாயிகளுக்கு மின் கட்டண சலுகைகளை நிறைவேற்றியுள்ளார்.
வாக்குறுதிகளில் மிக முக்கியமாக இருந்த, அரசு நிலங்கள், அப்பாவி மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும மாபியா கும்பலை தடுத்து, ஒழிப்பதாகும். தேர்தல் நேரத்தில பா.ஜனதா கட்சி அளித்த இந்த வாக்குறுதியை முதல்வர் ஆதித்யநாத் இப்போது நிறைவேற்றியுள்ளார்.
லக்னோவில் நேற்றுமுன்தினம் நடந்த, அமைச்சரவைக் கூட்டத்தில் நில மாபியாக்களை தடுக்க சிறப்பு படையை அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான உத்தரவை முதல்வர் ஆதித்யநாத் பிறப்பித்தார்.
இது குறித்து மாநில மின்சாரத்துறை அமைச்சர் காந்த் சர்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர பேசுகையில்,“ மாநிலத்தில் நில ஆக்கிரமிப்பாளர்கள், மாபியாக்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படை நில ஆக்கிரமிப்பாளர்களை அடுத்த 2 மாதங்களில் பிடித்து, கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள். அரசின் நிலங்களை மதத்தின் பெயரால்யாரும் அபகரிக்க அனுமதி இல்லை. அரசின் புறம்போக்கு நிலங்களை ஆக்கிமிர்தத, மதரீதியான கட்டிடங்கள் கட்டுவதற்கும் அனுமதி இல்லை.
இந்த தனிப்படை மாநிலத்தின் தலைமை செயலாளர்கள் மேற்பார்வையில் இயங்கும். மண்டல ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள் ஆகியோரிடம் மக்கள் புகார்களை அளிக்கலாம். இதற்காக அரசின் சார்பில் தனியாக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
மக்கள் புகார் அளித்தவுடன் உடனுக்குடன் நடவடிக்க எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புகார் மீது நடவடிக்கை எடுக்க ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், அதற்கு உரிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயும்’’ எனத் தெரிவித்தார்.