ஆதாருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மம்தா அரசு வழக்கு...
சமூக நலத்திட்டங்களின் பயன்களைப் பெறவும், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை சேர்ப்பது கட்டாயம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்காள அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது வரும் 30-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது.
மானிய சமையல் சிலிண்டர், மண்எண்ணெய் மானியம், உரம் உள்ளிட்ட 135 திட்டங்களின் பயன்களைப் பெற ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கிக்கணக்கு, பான் கார்டுடனும் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது
சமூக நலத்திட்டங்களைப் பெற ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இதை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி சட்டமாக நிறைவேற்றியுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தொடக்கத்தில் இருந்தே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய மம்்தா பானர்ஜி வங்கிக்கணக்குடன் நான் ஆதாரை இணைக்க முடியாது என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், சமூக நலத்திட்டங்களின் பயனைப் பெற ஆதார் கட்டாயம் என்றும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து மே.வங்காள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஏ.கே. பூஷன் ஆகியோர் அமர்வு முன் வரும் 30-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே சமூக நலத்திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ந்தேதி காலக்கெடுவாக மத்திய அரசு நிர்ணயித்து இருந்தது. ஆனால், அந்த அவகாசத்தை 2018ம் ஆண்டு, மார்ச் 31-ந்தேதி நீட்டித்து சமீபத்தில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
மேலும், அந்த காலம்வரை ஆதார் கார்டை சமூக நலத்திட்டங்களைப் பெற மக்களிடம் கட்டாயப்படுத்தக் கூடாது, ரேஷனில் பொருட்கள் வாங்க ஆதார் இணைக்க வேண்டும் என வலியுறுத்தக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.