ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை விடுவித்த ஒன்றிய அரசு... தமிழகத்துக்கு கிடைக்கும் தொகை எவ்வளவு?
மாநிலங்களுக்கான 44,000 கோடி ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை மத்திய அரசி விடுவித்துள்ளது. அதில் அதிகபடியான நிதி கேரளா, குஜராத், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மே.28 ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. அப்போது, ஜிஎஸ்டி வருவாய் குறைந்ததால் மாநிலங்கள் சந்தித்துள்ள இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு 2 புதிய சிறப்பு கடன் திட்டங்களை அறிவித்தது. அதன்படி ரிசா்வ் வங்கியுடன் இணைந்து மத்திய அரசு அமல்படுத்தும் முதலாவது திட்டத்தின் கீழ் மாநிலங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.97,000 கோடி வரை கடன் பெற்றுக்கொள்ளலாம் என்பதாகும். இரண்டாவது திட்டம், மாநிலங்கள் சந்திக்கவுள்ள ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறையான ரூ.2.35 லட்சம் கோடியையும் ஒட்டுமொத்தமாக மாநிலங்கள் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம் என்பதாகும். ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கு வெளிச்சந்தை பத்திரங்கள் மூலம் கடனாகப் பெற்று இந்த நிதியை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது. 43 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ,மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க 2021-22 நிதியாண்டிற்கு கூடுதலாக ரூ.1.59 லட்சம் கோடியை கடனாகப் பெற்றுத் தர முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இந்த ரூ.1.59 லட்சம் கோடியில் மத்திய அரசு முதல் தவணையாக ரூ.75,000 கோடியை கடந்த ஜூலை மாதம் 15 ஆம் தேதியும், இரண்டாம் தவணையை ரூ.40,000 கோடியை கடந்த அக்டோபா் மாதம் 7 ஆம் தேதியும் விடுவித்தது. இதில் மீதமுள்ள தொகையான ரூ.44,000 கோடியை மூன்றாவது தவணையாக தற்போது மத்திய அரசு விடுவித்துள்ளது.
இந்த மூன்றாவது தவணையில் தமிழகத்திற்கு ரூ.203.69 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த தொகையான ரூ.1.59 லட்சம் கோடியில் தமிழகம் ரூ.2,240.22 கோடி பெற்றுள்ளது. இதில் அதிக நிதி ஒதுக்கீடு பெற்ற மாநிலங்களாக கா்நாடகம் விளங்குகிறது. கர்நாடாகவுக்கு ரூ.5,010.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், குஜராத்துக்கு ரூ.3,608.53 கோடி, கேரளாவுக்கு ரூ.2,418.49 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இழப்பீட்டுக்கு மாற்றாக வழங்கப்படும் இந்த கடன் தொகையில் கடந்த 2020-21 நிதியாண்டில் ரூ.1.10 லட்சம் கோடியை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியது. கொரோனா, பொருளாதார சரிவு காரணமாக மத்திய அரசுக்கு கிடைக்க வேண்டிய கூடுதல் வரி அதிக அளவில் வசூலாகவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், கடன் பெற்று நிதியை மத்திய அரசு மாநிலங்களுக்குப் பிரித்து வழங்குகிறது. இந்தக் கடனை 5.69 சதவீதம் வட்டி வீதம் மாநிலங்கள் ஐந்தாண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்கிற நிபந்தனையுடன் இந்த நிதி வழங்கப்படுகிறது. மாநிலங்களுக்கான பொதுச் செலவீனம் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ள இந்த இழப்பீட்டு கடன் உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.