அரசின் உத்தரவை மதித்து நடப்பேன் – டிஐஜி ரூபா பேட்டி…
அதிகாரிகளை இடமாற்றம் செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு எனவும், கர்நாடக அரசின் உத்தரவை மதித்து நடப்பேன் எனவும் பணியிடமாற்றம் செய்யப்பட்ட போக்குவரத்து டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதைதொடர்ந்து, சிறையில் உள்ள சசிகலா, தனது பங்களாவில் இருப்பது போலவே ஆடம்பரமாக இருப்பதற்கு, சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக, கர்நாடக சிறைத்துறை அதிகாரி டிஐஜி ரூபா புகார் செய்தார்.
இதையடுத்து கர்நாடக முதலமைச்சர் விசாரணை குழு அமைக்கப்படும் எனவும் அதுவரை செய்தியாளர்களை சந்திக்க கூடாது எனவும் உத்தரவிட்டார்.
அதையும் மீறி ரூபா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். இதைதொடர்ந்து சிறைத்துறையில் இருந்த டிஐஜி ரூபா போக்குவரத்து துறைக்கு அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் ரூபா செய்தியாளர்களை மீண்டும் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிகாரிகளை இடமாற்றம் செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு எனவும், கர்நாடக அரசின் உத்தரவை மதித்து நடப்பேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் தனக்கு ஆதரவாக பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு நன்றியையும் ரூபா தெரிவித்தார்.