The Supreme Court has stated in the Supreme Court that those who have criminal background can not be banned in the election.

குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சிறை தண்டனை பெற்றவர்கள் மற்றும் குற்றப்பின்னணி கொண்டவர்களை தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்குகளை கடந்த ஜூலை மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையம் இது தொடர்பான தெளிவான நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டது.

இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின்போது, குற்றப்பின்னணி கொண்ட எம்.பி., எம்.எல்.ஏக்களின் பட்டியலை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறை தண்டனை அனுபவித்தவர்கள், கடத்தல், கொலை, கற்பழிப்பு போன்ற அதிதீவிர குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதிலளித்தது.

குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில், இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து குற்றப்பின்னணி கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து விசாரிக்க முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் இதுகுறித்து 6 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.