The Supreme Court has asked the Tamil Nadu government what special measures have been taken to control the struggles.
நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா மறைவையடுத்து மாநிலத்தில் நடந்த போராட்டங்களைக் கட்டுப்படுத்த என்ன சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நீட் தேர்வு
எம்.பி.பி.எஸ் மற்றும் பல்மருத்துவம் படிப்புகளில் சேர நீட் எனும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வை உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில் மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்த தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரியும் விலக்கு அளிக்கப்படவில்லை.
தற்கொலை
இதில் மாநிலப் பாடத்திட்டத்தில் 1796 மதிப்பெண் எடுத்த அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வில் தோல்வி அடைந்த வருத்தம் தாளாமல் கடந்த 1-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார்.
போராட்டம்
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டம், சாலை மறியல் செய்தனர்.ஏராளமானோர் பல்வேறு மாவட்டங்களில் கைது செய்யப்பட்டனர்.
உத்தரவு
இந்த போராட்டங்கள் குறித்து கடந்த 8-ந்தேதி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், நீட் தேர்வுக்கு எதிராக எந்த விதமான போராட்டங்களும் நடக்காமல் தமிழக அரசு தடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.
மனு
இந்நிலையில், வழக்கறிஞர் ஜி.எஸ். மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்துஇருந்தார். அதில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக உருவாகும் போராட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்குமாறு உறுதி செய்வது தமிழக அரசின் கடமையாகும்.
ரெயல் மறியல், சாலை மறியல் போன்றவற்றால் மக்களின் வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகிறது, பெரிய சிரமங்களை சந்திக்கிறார்கள். ஆதலால், அரசியல் கட்சிகள், தனிநபர்கள் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக போராட்டம் நடத்த தமிழக அரசு அனுமதிக்க கூடாது எனத் தெரிவித்து இருந்தார்.
தமிழக அரசுக்கு கேள்வி
இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வாலிகர், டி.ஓய். சந்திரசூட்ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “ தமிழகத்தில் நீட்தேர்வுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களைக் கட்டுப்படுத்த அரசு என்ன விதமான சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை அடுத்த 2 வாரங்களில் தலைமைச் செயலாளர் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தவவிட்டனர். மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்
