முத்தலாக்கை தடுக்க போராடிய ‘தனி ஒருவன்’ ஹமீது தல்வாய் - ஆதரவு அளிக்காத அரசியல் கட்சிகள், எதிர்த்த அடிப்படைவாதிகள்
முஸ்லிம் பெண்களின் திருமண பாதுகாப்புச் சட்டமான ‘முத்தலாக்’ சட்டத்தை மக்களவையில் நிறைவேற்றி மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு இன்று மார்தட்டி, கொண்டாடி வருகிறது.
ஆனால், 51 ஆண்டுகளுக்கு முன்பே, முஸ்லிம் சமூகத்தில் பிறந்த சீர்திருத்தவாதி ஹமீது தல்வாய் முத்தலாக் நடைமுறையை நீக்க தனி ஒருவனாக போராடியுள்ளார் என்ற விவரம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நினைக்கவில்லை
இன்று முத்தலாக்கை வைத்து அரசியல் செய்யும் பா.ஜனதா கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் கூட ஹமீது தல்வாய் முன்னெடுத்த முயற்சி பற்றி ஏன் நினைக்கவில்லை?, அவரை ஏன் குறிப்பிடவும் இல்லை ?.
50 ஆண்டுகளுக்கு முன்
முத்தலாக் நடைமுறை ஒழிப்பை அரை நூற்றாண்டுகளுக்கு முன் முஸ்லிம் சீர்திருத்தவாதி ஹமீது தல்வாய் முன்னெடுத்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம், கொங்கன் பகுதியில் உள்ள மிர்ஜோலி எனும் இடத்தில் கடந்த 1932ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி பிறந்தவர் ஹமீது தல்வாய்.
ஈர்ப்பு
ஹமீது தல்வாய்க்கு தொடக்கத்தில் சோசலிஸ்ட் கட்சியின் பிரிவான ராஷ்ட்ர சேவா தல் அமைப்பில் இணைந்து, சோசலிஸ்ட் தலைவர் பாய் வைத்யாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். ராம் மனோகர்லோகியா, ஜெய்பிரகாஷ் நாராயன், மகாத்மா காந்தி ஆகியோரால் ஈர்க்கப்பட்ட தல்வாய், முஸ்லிம்களிடையே சீர்திருத்தம் தேவை என்பதை வலியுறுத்தி எழுதினார்.
சீர்திருத்தம்
முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் ‘முத்தலாக்’, ‘பலதாரமணம்’, ‘ஹலாலா’ ஆகியவற்றை ஒழிக்க வேண்டும், திருமணத்தையும், விவாகரத்தையும் அரசியல் அமைப்புச் சட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்று ஹமீது தல்வாய் தீவிரமாக வளியுறுத்தினார்.
எதிர்ப்பு
இவரின் பிரசாரத்துக்கு தொடக்கத்தில் இருந்து, வாழ்வின் இறுதிவரை அடிப்படைவாதிகளாலும், மூட நம்பிக்கையாளர்களாலும் கடும் எதிர்ப்புகள் இருந்தது.
7 பேருடன் முதல் போராட்டம்
முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும், முத்தலாக் முறையை ஒழிக்க வேண்டும் எனக் கோரி எந்த விதமான அமைப்புகளின், அரசியல் கட்சிகளின் ஆதரவு இன்றி ஹமீது தல்வாய் மும்பையில் முதன் முதலாக போராட்டம் நடத்தினார்.
கடந்த 1966ம் ஆண்டு, ஏப்ரல் 18ந்ேததி 7 முஸ்லிம் பெண்களைத் திரட்டி ஹமீது தல்வாய் மும்பையில் போராட்டம் நடத்தினார். இதுதான் முத்தலாக் தடைக்கு எடுத்து வைத்த முதல் அடியாகும்.
முதல் படி
இந்த முதல் போராட்டம் குறித்து முஸ்லிம் சத்யசோதக் மண்டல் தலைவர் சம்சுதீன் தம்போலி கூறுகையில், “ ஹமீது தல்வாய் நடத்திய போராட்டமே முத்தலாக் நடைமுறைக்கு எதிரான முதல் படியாகும்.
அப்போது இருந்த மஹாராஷ்டிரா முதல்வர் வசந்தராவ் நாயக்கை சந்தித்து, பலதார மணம் ஒழிப்பு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துதல் ஆகியவற்றை அமல்படுத்தி முஸ்லிம் பெண்களுக்கு நீதியை நிலைநாட்டுகள் எனக் கோரி பெண்கள் மனு அளித்தனர். இது தொடர்பான கோரிக்கை மனுவும், அப்போது இருந்த மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ’’ என்று தெரிவித்தார்.
ஆதாயம் தேடும் அரசியல் கட்சிகள்
ஹமீது தல்வாயுடன் இணைந்து பணியாற்றியவர் 83வயது சயிது மெகபூப் ஷா காத்ரி என்ற சயத்பாய். இவரின் தங்கைக்கு 18 வயதில் முத்தாலாக் கொடுக்கப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
இதனால் மனம் வெறுத்த சயத்பாய், தல்வாய் இயக்கத்தில் ேசர்ந்து பணியாற்றினார். அவர் தல்வாய் குறித்து கூறுகையில், “ கடந்த 1960களில் முத்தலாக், பலதார மணம், ஹலாலா ஆகியவற்றை முஸ்லிம் சமூகத்தில் இருந்து ஒழிப்பது என்பது புரட்சிகரமான நடவடிக்கையாகும். இந்த விழிப்புணர்வை மேற்கொண்ட தல்வாய் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டார், எதிர்ப்புகளை சந்தித்தார், மிரட்டப்பட்டார், சமூகத்தால் ஆயுள் முழுவதும் ஒதுக்கிவைக்கப்பட்டார்.
இந்த போராட்டத்துக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை, ஒருசிலர் மட்டுமே இதற்கு ஆதரவு அளித்தனர். தனிமனிதராக போராடிய ஹமீது தல்வாய்க்கு அப்போது ஆதரவு இல்லை, ஆனால், இப்போது, அரசியல் கட்சிகள் அதைவைத்து அரசியல் செய்கின்றன.
தல்வாய், அவரின் மனைவி மெகரூன்னிஷா ஆகியோர் சமூகத்தால் எதிரியாக சித்தரிக்கப்பட்டனர். மதச் சட்டங்கள் மூலம் முஸ்லிம்பெண்கள் வேறுபாட்டுடன் நடத்தக்கூடாது என கூட்டங்கள், மாநாடுகள், போராட்டங்கள் நடத்தினர்.’’ எனத் தெரிவித்தார்.
முஸ்லிம்களை எதிரிகளாக பார்த்த ஆர்.எஸ்.எஸ்.
சோசலிஸ்ட் தலைவரும், தல்வாய் இயக்கத்தில் பணியாற்றியவருமான மற்றொருவருமான பாய் வைத்யா கூறுகையில், “ முத்தலாக் தடைச்சட்டத்தை இன்று கொண்டு வந்ததுபோல், அன்று ஹமீது தல்வாய் இயக்கத்தில் அரசியல் நோக்கம் இல்லை. அரசியல் அமைப்புச் சட்டம், மதச்சார்பின்மை மீது தல்வாய் அதிகமான நம்பிக்கை வைத்துஇருந்தார். அவரின் இயக்கத்தின் நோக்கம் சீர்திருத்தமே, அரசியல் செய்வது அல்ல.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எப்போதும் தனிச்சட்டத்துக்கு ஆதரவு அளித்தது, இந்துக்களுக்கு தனிச்சட்டம் தேவை என எம்.எஸ். கோல்வால்கர் வலியுறுத்தினார். முஸ்லிம்கள் சீர்திருத்தம் குறித்து ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேசியது இல்லை. முஸ்லிம்களை நாட்டின் எதிரிகளாக அவர்கள் சித்தரித்தனர்.
முஸ்லிம் மக்களை 2-ம் தர குடிமகன்களாக நடத்த நினைக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தல்வாய் கடுமையாக விமர்சித்தார். பெரும்பாலான மக்கள் மதச்சார்பின்மையை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள், மதபற்று கொண்டு இல்லை எனச் சாடினார்’’ எனத் தெரிவித்தார்.
இறந்தபின்பும் சர்ச்சை
முத்தலாக் நடைமுறையை ஒழிக்க முதல் அடியை எடுத்து வைத்த ஹமீது தல்வாய் சிறுநீரக நோய் பிரச்சினையால் அவதிப்பட்டார். கடந்த 1977ம் ஆண்டு தனது 44 வயதில் மரணமடைந்தார். இவர் இறந்தபின் சர்ச்சை அவரை விட்டு விலகவில்லை. தல்வாய் மரணத்தை அடிப்படைவாதிகளால் கொண்டாடப்பட்டது. தல்வாய்க்கு அஞ்சலி செலுத்த போடப்பட்ட கூட்டங்களுக்கு இடையூறு செய்யப்பட்டது.
எரிப்பதா? புதைப்பதா?
முஸ்லிம் சமூகத்தின்படி இறந்தவர் உடல் புதைக்கப்பட வேண்டும். ஆனால், தல்வாய் விருப்பமோ தனது உடல் எரிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த முறையை செய்ய முஸ்லிம் அடிப்படைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரச்சினை செய்தனர். இறுதியில் தல்வாய் உடல் எரியூட்டப்பட்டது.
இதுதான் தீர்வா?
முஸ்லிம் சமூகத்தில் உள்ள பலதாரமணத்தை ஒழிக்காமல் முத்தலாக் நடைமுறை ஒழிப்பதில் பயனில்லை, முஸ்லிம் பெண்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது எனப்தை ஹமீது தல்வாய் வலியுறுத்தினார்.
மாற்றுத்துக்கான ‘விதை தல்வாய்’
முத்தலாக்கை வைத்து இன்று பா.ஜனதா உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அரசியல் செய்துவரும் நிலையில், தனி ஒருவனாக முத்தலாக் தடையை முன்னெடுத்த ஹமீது தல்வாய் நினைவு கூற யாருக்கும் மனம் இல்லை.
இந்த தனி ஒருவனின் போராட்டம் தான் இன்று மாற்றத்துக்கான விதை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.