ஈவிரக்கம் இல்லாத ஆம்புலன்ஸ் ஓட்டுனர்! வாகனத்தில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளப்பட்ட நோயாளி!
காயப்பட்ட ஒருவர் மனிதாபிமானமற்ற வகையில், ஆம்புலன்சில் இருந்து தலைகீழாக டிரைவரால் தள்ளப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நட்டுக்கல் என்ற பகுதியில் நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவர் விபத்தில் அடிபட்டு சாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இவரைப் பார்த்த அருகில் இருந்தோர், தனியார் மருத்துவமனை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அந்த தனியார் மருத்துவமனை, அந்த நபரக்கு சிகிச்சை அளிக்க தங்களிடம் வசதியில்லை என்று கூறி பாலக்காடு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. இதையடுத்து, அந்த ஆம்புலன்சு பாலக்காடு மாவட்ட மருத்துவமனைக்கு விபத்தில் காயம்பட்டவரைக் கொண்டு வந்தது.
ஆம்புலன்சில் இருந்து காயம்பட்டவரை இறக்க டிரைவர் வந்துள்ளார். அப்போது ஆம்புலன்சில் இருந்தவர், சிறுநீர் கழித்தும், வாந்தி எடுத்திருப்பதைப் பார்த்தார். இதனால், ஆத்திரமடைந்த டிரைவர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவரை ஸ்ட்ரெச்சரோடு ஆம்புலன்சில் இருந்து கீழே தள்ளியுள்ளனர். இதில், ஸ்ட்ரெச்சர் தலைகீழாக கவிழ்ந்தது. அதன்பின் அந்த ஆம்புலன்ஸ் டிரைவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார்.
இந்த காட்சிகளை, அங்கிருந்தவர்கள் விடியோ எடுத்த, ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தனர். அது மலையாள செய்தி சேனல்களில் ஒளிபரப்பாகி பெரும் சர்ச்சையானது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் காயம் பட்டு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் விபத்தில் காயமடைந்திருந்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனைகள் அலைக்கழித்ததில், பரிதாபமாக உயிரிழந்தார். மனிதாபமானமற்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.