தேர்தலை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி – நாராயணசாமி பரபரப்பு பேட்டி
புதுச்சேரியில் நடைபெற உள்ள இடைத் தேர்தலை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக, புதுவை முதல்வர் நாராயணசாமி பரபரப்பு பேட்டியளித்தார்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், புதுச்சேரி நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளில் வரும் 19ம் தேதி இடை தேர்தல் நடைபெறுகிறது.
இதில், நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் சார்பில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போட்டியிடுகிறார். அண்ணாநகர் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.
அண்ணா நகரில் வாக்கு சேகரிக்க சென்ற இடங்களில் எல்லாம், பொதுமக்கள் தங்களது வீட்டுக்கு வெளியே வந்து வரவேற்பு கொடுக்கின்றனர். இத்தொகுதியில் அதிமுகவினர், தமிழகத்தில் உள்ளவர்களை, புதுச்சேரியில் இறக்கிவிட்டுள்ளனர். இங்கு தேர்தலை அமைதியாக நடத்தவிடாமல் சீர்குலைக்கும் வேலைகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இதை ஒருபோதும் ஏற்க முடியாது.
புதுவை அமைதியான மாநிலம். வாக்கு சேகரிப்பில் கலவரத்தை ஏற்படுத்துவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகளை நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.