‘ஒரே தவணையில் கடனை அடைக்க தயார்’ - விசாரணைக்கு ‘பயந்து பம்முகிறார்’ விஜய் மல்லையா
வங்கிகளிடம் பெற்ற ரூ.9 ஆயிரம் கோடி கடனை ஒரே தவனையில் அடைப்பது குறித்து, வங்கிகளிடம் பேசத் தயார் என்று சாராய சக்கரவர்த்தியும், தொழிலதிபருமான விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
கடன் மோசடி
மோசடி மன்னன் விஜய் மல்லையா, வங்கிகளிடம் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார். இப்போதுலண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வரும் மல்லையா மீது பல்வேறு ‘செக்’ மோசடி, அன்னியச் செலாவணி பரிமாற்றம், கடனை திருப்பி செலுத்தாத வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியிலும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
விரைந்து முடிக்க முடிவு
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மல்லையா தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, டியாகியோ நிறுவனத்தில் இருந்த தனது 4 கோடி அமெரிக்க டாலர் மதிப்பாலான பங்குகளை தனது பிள்ளைகளின் பெயரில் மாற்றியதை மீண்டும் வங்கியில் டெபாசிட் செய்யவும், தனது சொத்துக்களை வெளியிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கை விரைந்து முடிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
திடீர் பதிவு
உச்ச நீதிமன்றம் தனது வழக்கை வேகப்படுத்தியதை அறிந்த விஜய் மல்லையா நேற்று டுவிட்டரில் நீண்ட பதிவை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
ஒரே தவணை
பொதுத்துறை வங்கிகளிடம் கடன் பெற்று அதை ஒரே தவணையில் செலுத்தும் கொள்கைகள் வங்கிகளிடம் இருக்கின்றன. இதேபோல் நூற்றுக்கணக்கான கடனாளிகள் ஒரே தவணையில் கடனை செலுத்தி இருக்கிறார்கள்.
தயார்
உச்ச நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட இந்த வேண்டுகோளை வங்கிகள் பரிசீலனை கூட செய்யாமல் ஒதுக்கிவிட்டன. ஆனால், ஒரே தவணையில் கடன் அனைத்தையும் அடைக்க நான் தயார். வங்கிகளுடன் பேச்சு நடத்தவும் தயாராக இருக்கிறேன்.
தலையீடு
இந்த விசயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். வங்கிகளுக்கு உத்தரவிட்டு, பேச்சு நடத்தி, இந்த பிரச்சினையை முடிக்க வேண்டும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
அரசின் மனப்போக்கு
நான் ஒவ்வொரு நீதிமன்றத்தின் ஆணைக்கும், தாழ்மையுடன் எந்த விதமான நிபந்தனையும் இன்றி பணிகிறேன். எந்தவிதமான நியாயமான விசாரணையும் இன்றி மத்திய அரசும் என் மீது குற்றம் சாட்டுகிறது.
அட்டர்னி ஜெனரல் எனக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசின் மனப்போக்கையே காட்டுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.