2048-ஆம் ஆண்டில் டெல்லியில் ஒலிம்பிக் போட்டிகள்... அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆசை நிறைவேறுமா.?
வரும் 2048-ஆம் ஆண்டில் தலைநகர் டெல்லியில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்துமா என்ற கேள்வி எப்போதுமே இந்தியர்களிடம் எழும் கேள்வி. 1951 மற்றும் 1982-ஆம் ஆண்டுகளில் இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டிகளையும் 2010-இல் காமன்வெல்த் போட்டிகளையும் இந்தியா நடத்திக் காட்டியது. ஆனால், ஒலிம்பிக் போட்டிகளை இதுவரை நடத்தியதில்லை. ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பல்லாயிரம் கோடி செலவாகும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதை நடத்துவது என்பது மலைக்க வைக்கும் விஷயம். எனவே ஒலிம்பிக் போட்டிகள் பெரும்பாலும் வளர்ந்த நாடுகளிலேயே நடைபெற்று வருகின்றன.
2020 டோக்கியோ ஒலிம்பிக்கைத் தொடர்ந்து 2024-இல் பாரீஸிலும் 2028-இல் லாஸ் ஏஞ்சல்ஸிலும் 2032 பிரிஸ்பேனிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதன்பிறகு ஒலிம்பிக் நடைபெறும் இடங்களை ஒலிம்பிக் கமிட்டிதான் முடிவு செய்யும். இந்நிலையில் டெல்லியில் 2048-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடத்த வேண்டும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், “ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற நம் வீரர்களை வாழ்த்துகிறேன். வரும் 2048-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை டெல்லியில் நடத்த வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். அதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்” என்று அர்விந்த் கெஜ்ரிவால்.