ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் - காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு
பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்பந்தம் செய்ததில் ரூ. 30 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
விரோதம்
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்திதல் மோடி அரசு பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் விதிமுறைகளை மீறி, அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நலனுக்கு விரோதமாகச் செயல்பட்டுள்ளது.
தன்னிச்சையாக
கடந்த 2015ம் ஆண்டு, ஏப்ரல் 10-ந்தேதி பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது பறக்கும் நிலையில் இருக்கும் 36 ரபேல் போர்விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை டசால்ட் நிறுவனத்துடன் செய்துவிட்டதாக அறிவித்தார்.
பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் விதிமுறைகளை மீறி, அரசின் அமைச்சரவை ஒப்புதல் இல்லாமல், பாதுகாப்பு துறை அமைச்சர்கள் இல்லாமல் இந்த முடிவை மோடி தன்னிச்சையாக அறிவித்தார். ஆனால், இந்த ஒப்பந்தம் செய்யப்படும் போது, ரிலையன்ஸ்டிபன்ஸ் லிமிட்(ஆர்.டி.எல்.) நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி மட்டும் உடன் இருந்துள்ளார்.
ஒப்பந்தம் ரத்து
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருக்கும்போது, ரபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தம் என்பது, பிரான்சின் டசால்ட் நிறுவனத்துக்கும், இந்தியாவின் ஏரோநாட்டிகல்நிறுவனத்துக்கும் இடையே நடந்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை பிரதமர் மோடி 2015ம் ஆண்டு ஜுலை 30ந்தேதி ரத்து செய்துவிட்டார்.
36 ரபேல் போர்விமானங்களை வாங்க 8,700 கோடி டாலர் மதிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 23-ந்தேதி மோடி ஒப்பமந்தம் செய்தார். அடுத்த 10 நாட்களில் அதாவது 2016, அக்டோபர் 3ந்தேதிபிரான்ஸ் நிறுவனம் டசால்டுடன், ரிலையன்ஸ் டிபன்ஸ் லிமிட்ட் கூட்டாக இணைந்தது.
ரூ.30 ஆயிரம் கோடி
காங்கிரஸ் ஆட்சியின் போது ஒருவிமானத்தின் விலை ரூ.526 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் போது ரூ.1,570 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ரபேல் போர் விமானங்களை இவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டிய நிர்பந்தம் என்ன என்பது குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும்?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.