பணமதிப்பிழப்பு விவகாரம்... கையை விட்டு நழுவிய பலூன் போன்றது; பிரபல பத்திரிக்கை விமர்சனம்!
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதால் பிரதமர் மோடிக்கு தேர்தலில் தக்க பதிலடி கிடைக்கும் என்று தி கார்டியன் பத்திரிக்கை விமர்சனம் செய்திருப்பது பாரதிய ஜனதா கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதால் பிரதமர் மோடிக்கு தேர்தலில் தக்க பதிலடி கிடைக்கும் என்று தி கார்டியன் பத்திரிக்கை விமர்சனம் செய்திருப்பது பாரதிய ஜனதா கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டன் தினசரி பத்திரிக்கையில் வெளியாகியுள்ள கட்டுரையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பொருளாதாரம் கையை விட்டு நழுவிய பலூன் போன்று சுருங்கிவிட்டதாக விமர்சித்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்றும், 15 லட்சம் பேர் வேலையிழந்தனர் என்றும், 15 கோடி பேர் பல வாரங்கள் தினக்கூலி கிடைக்காமல் அவதிப்பட்டதாகவும் தி கார்டியன் கூறியுள்ளது. 2016 நவம்பரில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது கருப்புபண பேர்வழிகளை களையெடுக்கும் நடவடிக்கையே பிரதமர் மோடி விளக்கம் கொடுத்ததாகவும் அப்பத்திரிக்கை கூறியுள்ளது.
தற்போது தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99.3 சதவீதம் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி கூறியதையும், தி கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது. பணமதிப்பிழப்பு தவறு என்றால் தண்டனை கொடுங்கள் என மோடி அரைக்கூவல் விடுத்ததை தி கார்டியன் குறிப்பிட்டுள்ளது. விரைவில் தேர்தலை சந்திக்கும் பாரதிய ஜனதா ஆளும் 3 மாநிலங்களில் வெற்றி உறுதி என காங்கிரஸ் நம்பிக்கையுடன் உள்ளதாக அப்பத்திரிக்கை தெரிவித்துள்ளது.