281 ரன்கள் எடுத்தால் வெற்றி - நியுசிலாந்துக்கு இலக்கை நிர்ணயித்த இந்தியா...!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தனர். இந்திய அணியின் தவானும், ரோகித் சர்மாவும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஆனால் ஆட்ட தொடக்கத்திலேயே ரன்களை குவிக்க இந்திய அணி வீரர்கள் தடுமாறினார்கள். இந்தியா 29 ரன்கள் எடுப்பதற்குள் தொடக்க வீரர்கள் ஆட்டம் இழந்தனர்.
4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. மிகவும் பொறுமையாக விளையாடிய கேப்டன் விராட் கோலி 25வது ஓவரில் அரைசதம் அடித்தார்.
இதையடுத்து கோலியுடன் டோனி ஜோடி சேர்ந்தார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனி 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போல்ட் பந்தில் கப்திலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
சிறப்பாக விளையாடிய கோலி சதம் அடித்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் 31-வது சதமாகும். இதன்மூலம் பாண்டிங்கின் சாதனை கடந்த கோலி ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். மேலும் 200-வது போட்டியில் சதம் அடிக்கும் இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
சதம் அடித்த கோலி 121 ரன்கள் எடுத்து சவுத்தி வேகத்தில் போல்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் போல்ட் 4 விக்கெட்டும், சவுத்தி 3 கெட்டும் வீழ்த்தினர்.இதன்மூலம் நியூசிலாந்து வெற்றிக்கு 281 ரன்களை இந்திய அணி இலக்காக நிர்ணயித்தது.