பிஎஸ்எல்வி சி-52 என்ற ராக்கெட் மூலமாக E0S – 04 செயற்கைக்கோள் இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்களை தயாரித்து அவற்றின் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அண்மைக்காலமாக ஒவ்வொரு ஆண்டும் அதிகஎண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வந்தன.
ஆனால், கரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக கடந்த ஆண்டு செயற்கைக்கோள் ஏவும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. இந்த ஆண்டு பிஎஸ்எல்வி வரிசையில் உருவாக்கப்பட்டுள்ள பிஎஸ்எல்விசி-52 ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் பணியில் இஸ்ரோ மும்முரமாக இறங்கியது.

அதன்படி, இஓஎஸ்-04 என்ற ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள், ஐஎன்எஸ்-2டிடி தொழில்நுட்ப செயற்கைக்கோள், பெங்களூரு இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்கொலோரேடோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கிய இன்ஸ்பையர்சாட்-1 என்ற மாணவர் செயற்கைக்கோள் ஆகிய 3செயற்கைகோள்கள் வடிவமைக்கப்பட்டன.
மொத்தம் 1,710 கிலோ எடை கொண் ட ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான இஓஎஸ்-04 , வேளாண்மை, மண்ணின் ஈரப்பதம், நீர்வளம் போன்றவற்றுக்கு தேவையான உயர்தர வரைபடங்களை அனைத்து காலநிலைகளிலும் எடுத்துஅனுப்பக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இது பூமியில் இருந்து 529 கி.மீ. தொலைவில் துருவ சுற்றுப்பாதையில் சுற்றும் வகையில் நிலைநிறுத்தப்படும்.

இந்த மூன்று செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட்டை, ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து 14-ம் தேதி (இன்று) அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை 5.59 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 1,710 கிலோ எடை கொண்ட E0S – 04 என்ற பூமியை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள்,புவியில் இருந்து 530 கி.மீ உயரத்தில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ளது.இந்த செயற்கைக்கோள் விவசாயம்,வெள்ளம் போன்றவற்றை துல்லியமாக படம்பிடிக்கும் அதிநவீன கேமராக்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும்,இந்த ராக்கெட் மூலம் இன்ஸ்பயர் சாட்-1,ஐஎன்எஸ்-2டிடி ஆகிய 2 சிறிய வகை செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதனால்,விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.இந்த ஆண்டில் இந்தியா விண்ணில் செலுத்தும் முதல் செயற்கைக்கோள் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
