இனி, வீடு தேடி வரப்போகிறது... - ரேசன் பொருட்கள், சாதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம்
பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்ப்பதற்காக ரேசன் பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட அரசின் சேவைகள் அனைத்தும் மக்களின் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
இலவச பயணம்
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் டெல்லி மக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் அங்கு காற்று மாசுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து அரசு பஸ்களில் இலவச பயணம் போன்ற நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்தது. இந்த நிலையில் டெல்லி அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
வீடுதேடி வரும்
இதுகுறித்து முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ரேசன் பொருட்களை வழங்குதல் போன்ற அடிப்படை அரசு சேவைகள் அனைத்தும் மக்களின் வீடு தேடி வந்து டெல்லி அரசு நிறைவேற்றும். ஏழைகளுக்கான உணவுப் பொருட்கள வீட்டிற்கே வந்து வழங்கப்படும் என்றார்.
வரிசை தவிர்ப்பு
டெல்லி துணை முதல் அமைச்சர் மணிஷ் சிசோடியா கூறும்போது, அரசு சேவைகளை வீட்டிற்கே வந்து நிறைவேற்றவது தொடர்பாக அதிகாரிகள் ஆவணங்களுடன் மக்களின் வீடுகளுக்கு வருவார்கள். இதையடுத்து அரசு சேவைகள் அனைத்தும் மக்களின் வீடு தேடிச் செல்லும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசின் சேவைகளை பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்.
சான்றிதழ்கள்
இதனால் அவர்களுக்கு மன உளைச்சலும், உடல்நல பாதிப்பும் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காகத்தான் டெல்லி அரசு இந்த நடவடிக்கையை எடுக்கத் தொடங்கி உள்ளது. இதன்படி, திருமணச் சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவையும் வீடு தேடி வந்து வழங்கப்படும். இதற்காக தனி ஊழியர்கள் ஏற்படுத்தப்படுவார்கள்.
அரசு அலுவலகங்களுக்கு சென்று ஆவணங்களை அளிப்பதைக் காட்டிலும், டெல்லி மக்களுக்கு அதிக வேலைகள் உள்ளன. முதல்கட்டமாக அரசின் 40 சேவைகள் இந்த திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும். இதன்பின்னர், அதற்கு அடுத்த மாதத்தில் கூடுதலாக 40 சேவைகள் சேர்க்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாக்ஸ்
அதிரடிக்கு காரணம்
காற்று மாசு தொடர்பாக கடந்த 2 வாரங்களாக டெல்லி அரசு மக்களின் கோபத்தை சம்பாதித்து வருகிறது. இதேபோன்று மக்களிடம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு செல்வாக்கு குறைவு என்று அமெரிக்காவின் பிரபல ஆராய்ச்சி நிறுவனமான பியூ தெரிவித்துள்ளது. இந்த சூழலில் டெல்லி மக்களுக்காக ஓர் அதிரடித் திட்டத்தை முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.