சுகேஷ் ஜாமீன் மனு... பதில் மனு தாக்கல் செய்ய டெல்லி போலீசாருக்கு உத்தரவு...
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன், மது மீதான பதில்மனு மற்றும் விசாரணை நிலவரம் குறித்து தாக்கல் செய்ய டெல்லி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக இரட்டை இலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு தொடர்பாக பதிலளிக்குமாறு டெல்லி போலீசாருக்கு, உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மற்றும் இடைத்தரகராக செயல்பட்டதாக சுகேஷ் சந்திரசேகர் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் இருந்து டிடிவி தினகரனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தன.
இந்த நிலையில், சுகேஷ் சந்திரசேகர் தரப்பில் ஜாமின்கோரி, 4-வது முறையாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜாமின் மனு மீதான பதில் மனு மற்றும் விசாரணை நிலவரம் ஆகியவற்றை தாக்கல் செய்ய டெல்லி போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை செப்டம்பர் 5 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.