‘தனிநாடு போல, தனிக்கொடி’ கேட்கும் கர்நாடகம் - 9 பேர் கொண்ட குழுவை அமைத்தது சித்தராமையா அரசு
கர்நாடக மாநிலத்துக்கு என தனிக்கொடியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, இதற்காக 9 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான அரசு ஒரே நாடு என்ற கோரிக்கையை உரக்க வலியுறுத்தி வரும் நிலையில், கர்நாடக அரசு இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
அவ்வாறு கர்நாடக அரசு மாநிலத்துக்கு என தனிக்கொடியை உருவாக்கி அதற்கு சட்ட அங்கீகாரம் பெறும் பட்சத்தில், நாட்டில் 2-வது தனிக்கொடி பெற்ற மாநிலம் என்ற பெயரைப் பெறும். இதற்கு முன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்புச் சட்டம் 370வது பிரிவு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு இத்தகைய முயற்சியை கையில் எடுத்துள்ளது.
இதற்கு முன் கடந்த 2012ம் ஆண்டு பா.ஜனதா ஆளும் போது, மாநிலத்துக்கு தனிக் கொடி குறித்து உயர் நீதிமன்றத்தில் தெரிவித்த அறிக்கையில், “ சிவப்பு மற்றும் மஞ்சள நிறத்தில் இருக்கும் கொடியை கர்நாடக மாநில கொடியாக ஏற்றுக்கொள்ள முடியாது. தனிக்கொடி என்பது நாட்டின் ஒற்றுமைக்கும், கொள்கைகக்கும் முரணானது எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தனிக்கொடி குறித்த குரல் எதிரொலிக்கத் தொடங்கியது. இதனால், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு , மாநிலத்துக்கு தனிக்கொடி உருவாக்குவதற்கான குழுவை கடந்த ஜூன் 6-ந்தேதி அமைத்து அரசாணை பிறப்பித்துள்ளது.
கர்நாடக கலாச்சாரத்துறையின் முதன்மைச் செயலாளர், கலாச்சாரத்துறை தலைவர்,சட்டம், உள்துறை, சட்டசபை விவகாரத்துறை, பணியாளர் துறை, நிர்வாகத்துறை ஆகியவற்றில் இருந்து அதிகாரிகள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
மேலும், கன்னட சாகித்ய பரிசத், கன்னட ேமம்பாட்டு ஆணையம், ஹம்பிபல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் , கன்னட கலாச்சார அமைப்பின் தலைவர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அரசாணைக்கு ஆளுநர் சார்பாக, மாநிலத்தின் கலாச்சாரத்துறையின் செயலாளர் அன்னபூர்னா கையொப்பமிட்டுள்ளார்.