சிக்கப்போறாங்க மத்திய அரசு ஊழியர்கள்… - வங்கி டெபாசிட்களை ஆய்வு செய்கிறது மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்
பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்கு பின், வங்கியில் மத்திய அரசு ஊழியர்கள் செய்த டெபாசிட்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய ஊழல்தடுப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் உதவியை நாடி இருப்பதாக, மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் கே.வி. சவுத்ரி நேற்று தெரிவித்தார்.
நாட்டில் கருப்புபணம், கள்ளநோட்டுகள், ஊழலை ஒழிக்கும் நோக்கில் கடந்த ஆண்டு நவம்பர 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து வங்கி, தபால் நிலையங்களில் மக்கள் செல்லாத நோட்டுகளை டெபாசிட் செய்து, புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.
இந்த சூழலைப் பயன்படுத்தி, மத்தியஅரசு ஊழியர்களில் சிலர் கருப்பு பணத்தையும் அதிக அளவு டெபாசிட் செய்து இருக்கலாம் என தகவல்கள் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்துக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, மத்திய அரசு ஊழியர்களின் வங்கி டெபாசிட்களை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் கே.வி. சவுத்ரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது-
ரூபாய் நோட்டு தடை அறிவிக்கப்பட்டபின் மத்திய அரசு ஊழியர்கள் வங்கிக்கணக்கில் செய்த டெபாசிட்கள் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்காக வருமானவரித்துறையின் தலைமை அமைப்பான, மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் இருந்து புள்ளிவிவரங்களைப் பெற்று இருக்கறோம். இந்த புள்ளிவிவரங்களை பகுத்து, அடுத்த கட்டமாக நடவடிக்கை தொடங்கும்.
இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளும் பலமுறை கலந்தாய்வு செய்துள்ளோம். மத்திய அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்குகளை எப்படி ஆய்வு செய்வது?, அந்த ஆப்ரேஷனை எப்படி நிழத்துவது?, எத்தனை முறை வங்கியில் பணப்பரிமாற்றம் செய்தனர் என்பது குறித்து விவாதித்து இருக்கிறோம்.
அவர்கள் டெபாசிட் செய்த தொகைக்கும், அவர்களின் வருமானத்துக்கும் ஈடாக இருக்கிறதா, ஒத்துப்போகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய இருக்கிறோம். இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே ஒரு ஆய்வை நடத்தி இருப்பதால், அவர்களின் உதவியை நாடி இருக்கிறோம். அவர்கள் மிகத் துல்லியமான புள்ளி விவரங்களை அளிப்பார்கள் என நம்புகிறோம்.
நாங்கள் மேற்கொள்ளப் போகும் இந்த ஆய்வில் மத்தியஅரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள், ஆகியோர் விசாரணைக்குள் கொண்டுவரப்படுவார்கள். எங்களின் அதிகாரவரம்புக்குள் வராத அதிகாரிகள் ஒருவேளை சந்தேகத்துக்கு குரிய வகையில் அதிகமான பணப்பரிமாற்றம் செய்து இருந்தால், லஞ்ச ஊழிப்பு அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்களில் சிலர் சந்தேகத்துக்கு இடமான வகையில் டெபாசிட் செய்துள்ளதாக வந்த தகவல்களையடுத்து, இந்த நடவடிக்க எடுக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.