கூடங்குளத்துக்காக ரூ. 1000 கோடி கடன் வாங்கியதில் விதிமீறல்... கண்டறிந்தது சி.ஏ.ஜி...!
கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க ரூ.1000 கோடி கடன் வாங்கியதில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்நிலையம் இந்திய அணு மின் குழுமம் சார்பில் ரஷ்ய நாட்டு நிதியுதவியுடன் தொடங்கப்பட்டது.
தொடக்கத்தில் இரு அணு உலைகள் அமைக்க திட்டமிடப்பட்டன. இதற்காக இந்திய அணு மின் குழுமம் ஹெச்.டி.எப்.சி வங்கியிடம் ரூ.1000 கோடியை கடனாக பெற்றிருந்தது.
இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையம் அமைப்பதற்காக பெற்ற கடனில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சிஏஜி தரப்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்திற்கு வங்கியில் ரூ.1000 கோடி கடன் வாங்கியதில் விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் அணுமின் நிலையத்திற்கு வழங்கப்பட்ட குறைபாடுள்ள பொருட்கள் காரணமாக கூடுதல் செலவீனம் ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவோ, சரிசெய்யவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் 1, 2வது அணு உலைகள் அமைக்க தாமதமானதால் அரசு ரூ.449 கோடி கூடுதல் வட்டி செலுத்த நேரிட்டது எனவும் தெரிவித்திருந்தது.
எதிர்வரும் காலத்தில் அணு உலைகள் அமைக்கும் பணிகள் தாமதமாகும் நிலை ஏற்பட்டால் கடனை திருப்பி செலுத்துவதில் கால அவகாசம் தேவைப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.