ரெயில் நிலைய ‘பிளாட்பார்ம்’ கடைகளுக்கு வாரியம் திடீர் உத்தரவு
ரெயில் நிலையங்களில் இருக்கும் நடைபாதை கடைகளில் இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், மதிப்புகளை விளக்கும் புத்தகங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று அனைத்து மண்டல மேலாளர்களுக்கு ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த 5-ந்தேதி அனைத்து பொது மேலாளர்களுக்கும் வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது-
புதிய பல பயன்பாட்டுக் கொள்கை (எம்.பி.எஸ்.) அடிப்படையில் ரெயில்நிலையத்துக்குள் இருக்கும் புத்தகக் கடைகள், மருந்து கடைகள், அனைத்து நடைபாதை கடைகளிலும் இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம், மதிப்புகள், ஒழுக்க நெறிகள், வரலாறு ஆகியவை குறித்த புத்தகங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.
புத்தகக் கடை கொள்கை 2004 அடிப்படையின் கீழ், இலக்கியம், வரலாறு, குழந்தைகளுக்கான புத்தகம், பயணம், கலாச்சாரம், பொது அறிவியல், உள்ளிட்ட பலதுறை சார்ந்த புத்தகங்கள் இந்தி, ஆங்கில மொழியிலும், பிராந்திய மொழிகளிலும் விற்கப்பட வேண்டும்.
மேலும், உள்நாட்டு கலைகளை விளக்கும் வகையில் கைவினைப் பொருட்கள், பிராந்திய முக்கியத்துவத்ைத விளக்கும் பொருட்கள், குடிநீர், மருந்துகள், பால் பவுடர் போன்ற பொருட்களும் விற்பனை செய்யப் பட வேண்டும்.
மேலும், ரெயில்கள் புறப்படும் நேரம், வரும் நேரம் குறித்த பட்டியலும் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பயணிகள் பார்க்கும் வகையில் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும்.
மேலும், புதிதாக அமையும் கடைகளில் பயணிகள் பணம் செலுத்த ‘ஸ்வைப்பிங் எந்திரம்’ கண்டிப்பாக இருக்க வேண்டும். பயணிகள்டெபிட், கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், ரூ.100 வரை எந்தவிதமான பரிமாற்ற கட்டணமும் வசூலிக்க கூடாது.
இது போன்ற கடைகளை நடத்த சில்லரை வர்த்தகர்கள், தனி நபர்கள், சுய உதவிக்குழுக்கள் ஆகியோரும் விண்ணப்பிக்கலாம். முறைப்படியான ஆய்வுகள் முடிந்தபின், கடைகள் ஒதுக்குவது குறித்து முடிவு செய்யப்படும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.