தேர்தல் விதிமுறையை மீறிய மோடி...? தேர்தல் ஆணையத்தில் அமைச்சர்கள் விளக்கம்...!
பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதியை மீறியதாக காங்கிரஸ் அளித்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் பாஜக சார்பில் அமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
அமைச்சர்கள் ரவிசங்கர், நிர்மலா சீதாராமன், முக்தார் அப்பாஸ் நக்வி, பி.வி.சவுத்ரி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளனர்.
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு மொத்தமுள்ள 182 தொகுதிகளில், முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு சனிக்கிழமை தேர்தல் நடந்து முடிந்தது.
இதில் 66.74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இரண்டாம் கட்டமாக, 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்படுகிறது.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும், எதிர்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் இத்தேர்தல் அக்கட்சியினருக்கு கவுரவப் பிரச்னையாகியுள்ளது.
இதனால், இருகட்சியினரும் இரண்டாம் கட்டத் தேர்தலையொட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இன்று தேர்தல் நடைபெற இருந்ததால் நேற்று மாலையுடன் வாக்கு சேகரிப்பு நேரம் நிறைவடைந்தது.
ஆனால் பிரதமர் மோடி தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இன்று வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் காங்கிரஸின் புகார் குறித்து பாஜக சார்பில் அமைச்சர்கள் ரவிசங்கர், நிர்மலா சீதாராமன், முக்தார் அப்பாஸ் நக்வி, பி.வி.சவுத்ரி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளனர்.