‘பத்மாவதி’ திரைப்படத்தை எதிர்த்து டிச. 1-ல் நாடு தழுவிய `பந்த்' - `கர்னி சேனா' அறிவிப்பு
‘பத்மாவதி’ திரைப்படம் திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 1-ந்தேதி நாடு தழுவிய பந்த் நடத்தப்படும் என்று கர்னி சேனா அமைப்பு அறிவித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடும் எதிர்ப்பு
ராஜஸ்தானை ஆண்ட ராஜபுத்திர மகாராணி ‘பத்மாவதி’யின் வரலாற்றை மையமாகக் கொண்டு, பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ‘பத்மாவதி’ என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படம் அடுத்த மாதம் 1-ந்தேதி திரைக்கு வருகிறது. இதற்கிடையே, ராணி ‘பத்மாவதி’யின் வரலாற்றை திரித்து படம் எடுக்கப்பட்டுள்ளதாக பல்வேறு ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜபுத்திர சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மோடிக்கு கோரிக்கை
அவற்றில் குறிப்பாக ராஜஸ்தான் மன்னர் குடும்ப உறுப்பினர்கள், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் தடைகளை மீறி ‘பத்மாவதி’ திரைப்படம் திரைக்கு வருவது உறுதி என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், திரைப்படம் வெளியாகும் டிசம்பர் 1-ந்தேதி நாடு தழுவிய பந்த் நடத்தப்படும் என்று `கர்னி சேனா; அமைப்பு அறிவித்துள்ளது. இந்த அமைப்புதான் ‘பத்மாவதி’ படப்பிடிப்பை சூறையாடி தீயிட்டு கொளுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ‘பத்மாவதி’ திரைப்படத்தின் டிரெய்லரை கோடா மாவட்டத்தில் உள்ள ஒரு திரையங்கம் ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. அங்கு சென்ற கர்னி சேனா அமைப்பினர், திரையரங்கை சூறையாடினர்.
பேரணி - போராட்டம்
இந்த நிலையில் கர்னி சேனா அமைப்பின் நிறுவனத் தலைவர் லோகேந்திர சிங் கல்வி கூறுகையில், ‘பத்மாவதி’ திரைப்படம் வெளியாகும் டிசம்பர் 1-ந்தேதி நாடு தழுவிய அளவில் பந்த் நடைபெறும். அன்றைய தினம் குருகிராமம், பாட்னா, லக்னோ, போபால் உள்ளிட்ட இடங்களில் பேரணியை நடத்துவோம். இதற்கு முஸ்லிம்கள் உள்பட அனைத்து சமூகத்தினரும் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர். படத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அந்த படத்தை நாங்கள் பார்க்க விரும்பவில்லை. அதனை தடை செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.